அதிமுக அவைத்தலவைவரால் இபிஎஸ்- ஒபிஎஸ் அணிகளுக்குள் மீண்டும் சிக்கல் தலைக்காட்ட ஆரம்பித்திருக்கிறது.
நடந்து முடிந்த ஆர்.கே நகர் தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக சுயேட்சை வேட்பாளர் தினகரனிடம் தோல்வியடைந்தது. திமுக டெபாசிட் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பார்முலாவை பின்பற்றி, தோல்விக்கு காரணமானவர்களை கட்சியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் ஏன் மேற்கொள்ளவில்லை என கேட்டும், அமைச்சர் ஒருவரை குற்றம் சாட்டியும் கடிதம் எழுதியுள்ளார், அக்கட்சியின் அவைத்தலைவரும் , ஆர்.கே நகரில் போட்டியிட்டவருமான மதுசூதனன். தனது கடிதம் குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய மதுசூதனன் , தான் உருவாக்கிய கட்சி அதிமுக என்றும் , கட்சி உருவான போது சிறை சென்று திரும்பினேன் என்றும் பழைய பெருமைகளை பேசினர். அந்தக் கடிதம் எதுக்கு என கேள்வி கேட்டால் அதெல்லாம் தலைமையிடம் கேட்டுகொள்ளுங்கள், எதற்காகவும் கட்சியின் மேல் அதிருப்தி ஆகமாட்டேன் என சொல்லிட்டு காரில் சென்று விட்டார் மதுசூதனன்.
அந்த டாப் சீக்ரெட் கடிதத்தில் அணிகள் இணைய வழி ஏற்படுத்தியதேதான் என்றும், ஆனால் தன்னை தோற்கடிக்க அமைச்சர் ஒருவர் எப்படி செயல்படலாம் என அமைச்சர் ஜெயகுமார் மீது காரசார விமர்சனங்களை அள்ளி தெளித்துள்ளாதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் அணியில் முக்கிய அமைச்சராக இருக்கும் ஒருவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டில் உண்மை வெளிவருமா என கேள்வி எழுகிறது. தினகரனும் தன் பங்குக்கு மதுசூதனனை நிறுத்தியதே தப்பு, அதிலும் ஜெயகுமார் பகுதியில் மதுசூதனை நிறுத்தினால் எப்படி ஜெயிக்க வைப்பார் என அவரும் அமைச்சர் ஜெயகுமாரை குற்றம்சாட்டி சண்டையில் எண்ணெய் ஊற்றியிருக்கிறார்.
கடிதம் குறித்து வாய்திறக்க யோசித்த அதிமுக ஒரு வழியாக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனை பேச வைத்திருக்கிறது. அதிமுகவினர் ஆர்கே நகரில் தேர்தல் பணி செய்யவில்லை என கூற முடியாது என்றும் தோற்றால் ஒரு பேச்சும் , ஜெயித்தால் ஒரு பேச்சும் பேசுவது அழகல்ல என நேரடியாகவே மதுசூதனனை தாக்கியுள்ளர் வைகைச்செல்வன்.
முன்பே அணிகள் இணைந்தது மனங்கள் இணையவில்லையே என ஓபிஎஸ் அணி மைத்ரேயன் எதிர்ப்பு கிளப்ப, உண்மைதானே என கேபி முனுசாமி வழிமொழிய ஏகப்பட்ட கூட்டங்கள் நடத்தி இப்போதுதான் சமரசம் ஆனது அதிமுக. ஆனால் அதற்குள் மீண்டும் ஓபிஎஸ் தரப்புக்காரர் ஒருவர் மீண்டும் சிக்கலை ஏற்படுத்துகிறார்.