வெந்நீர் அல்லது குளிர்ந்த தண்ணீர்.. எதில் குளிப்பதில் நன்மை அதிகம்? - ஓர் குளுகுளு பார்வை!

வெந்நீர் அல்லது குளிர்ந்த தண்ணீர்.. எதில் குளிப்பதில் நன்மை அதிகம்? - ஓர் குளுகுளு பார்வை!
வெந்நீர் அல்லது குளிர்ந்த தண்ணீர்.. எதில் குளிப்பதில் நன்மை அதிகம்? - ஓர் குளுகுளு பார்வை!

தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் நோய்த்தொற்று, வியாதி பரவல் என்று பலரும் பயந்துபோயுள்ளனர். இதனாலேயெ ஒரு சாரார் குளிர்ந்த தண்ணீரில் குளிக்க பயப்படுகிறார்கள். சூடான தண்ணீரில் குளிக்கும்போது நோய்த்தொற்றுகள் அழிந்துவிடும் என்றே நம்புகின்றனர். ஆனால் வெந்நீர் அல்லது குளிர்ந்த நீர், எதுவாக இருந்தாலும் இரண்டிலும் நன்மைகள் இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.  

வெந்நீரின் நன்மைகள்:

என்னதான் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது என்றாலும், குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதையே நாம் விரும்புவோம். வெயில்காலத்திலும் வெந்நீரில் குளிப்பது நல்லது என்கிறது ஒரு ஆய்வு. இது தசைப்பிடிப்பால் அவதிப்படுவோருக்கு ரிலாக்ஸை கொடுக்கும். வெளியே வெயிலில் சுற்றிவிட்டு உடனடியாக ஏசி அறைக்குள் செல்லும்போது திடீரென உடல் வெப்பத்தில் மாற்றம் ஏற்படுவதால் இருமல் மற்றும் தும்மல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். வெந்நீரில் குளிக்கும்போது இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.

1. தசைபிடிப்பு நீங்கும்:

பல்வேறு காரணங்களால் தசைபிடிப்பு ஏற்படுகிறது. தவறான முறையில் அமர்தல் அல்லது விளையாடுவதால் தசைபிடிப்பு ஏற்படுகிறது. இதனால் வலி அதிகமாகும்போது மருத்துவரை அணுகுவது சிறந்தது. முதன்முதலாக ஏதேனும் ஒரு விளையாட்டில் கவனம் செலுத்துபவராக இருந்தால் அவர்கள் வெந்நீரில் குளிப்பது மருந்து இல்லாமல் வலியை நீக்கி, தசைகளை தளர்த்தவும், வளைக்கவும் உதவும்.

2. மன அழுத்தத்தை போக்கும்:

கோடைக் காலங்களில், வெப்பம் அதிகமாக இருப்பதால் பகல், இரவு என்று பாராமல் எப்போதும் ஏசியை பயன்படுத்துகிறோம். ஏசி அறையைவிட்டு வெளியேறும்போது உடனடியாக அதீத வெப்பநிலைக்குள் செல்வதால் அது தொற்று ஏற்பட வழிவகுக்கும். இதனால் உடலில் ஒருவித அழுத்தமும், அசௌகர்யமும் ஏற்படும். எனவே சூடான நீரில் குளிப்பது அழுத்தத்தை குறைத்து நல்ல நித்திரையை கொடுக்கும்.

3. மாதவிடாய் வலியைக் குறைக்கும்:

மாதவிடாய் காலங்களில் சூடான தண்ணீரில் குளிப்பது வலியை சற்று குறைக்கும். சூடான தண்ணீர் நரம்புகளில் அழற்சியை குறைக்கும்.

4. சருமத்தை சுத்திகரிக்கும்:

சரும துவாரங்களை திறந்து சருமத்தில் படிந்துள்ள எண்ணெய் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்வதற்கு குளிர்ந்த நீரை விட வெந்நீரே சிறந்தது.

5. ஒற்றை தலைவலிக்கு தீர்வு:

ஒற்றை தலைவலி எப்போதும் வராவிட்டாலும், எப்போதாவது வருவதே அதீத அசௌகர்யத்தை உருவாக்கும். சூடான தண்ணீரில் குளிப்பது நாள்பட்ட தலைவலி, ஒற்றை தலைவலியை குறைத்து உடனடியான தீர்வை கொடுக்கும்.

குளிர்ந்த நீரின் நன்மைகள்:

இந்தியாவை பொருத்தவரை குளிர்ந்த தண்ணீரில்தான் குளிக்கவேண்டும் என்பதை பல வீடுகளில் வழக்கமாகவே கொண்டுள்ளனர். குறிப்பாக வெயில்காலங்களில் வெப்பநிலை 48 டிகிரிக்கும் அதிகமாகும்போது சூடான தண்ணீரில் குளிக்க நாமே விரும்ப மாட்டோம். அதிலும் கொளுத்தும் வெயிலில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது உடலின் வெப்பநிலையை தணிக்க குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதைவிட சிறந்தவழி இருக்கமுடியாது. உடலின் வெப்பத்தை தணிப்பதை விட குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதால் வேறு சிறந்த பலன்களும் இருக்கிறது.

உடற்பருமனால் அவதிப்படுபவர்கள் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதால் எடை குறையும் என்கிறது ஒரு ஆய்வு. உடற்பருமன் பிரச்னை உள்ளவர்கள் குளிர்ந்த தண்ணீரில் குளிக்கும்போது அவர்களின் மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, கலோரி எரிக்கும் செயலை வேகப்படுத்துகிறது. இது எடை குறைப்பை தூண்டுகிறது. மேலும் குளிர்ந்த தண்ணீரில் குளிர்ப்பதால் உடலில் குளுக்கோஸ் உறிஞ்சுதலை அதிகரித்து, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

எலிகளை வைத்து நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் குளிர்ந்த வெப்பநிலை எலிகளின் எடையை குறைந்திருப்பதாக Nature Metabolism இதழில் வெளியான ஆய்வுகட்டுரைக் கூறுகிறது. வீக்கத்தின்மீது குளிர் பரவும்போது அது எப்படி உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடற்பருமனை குறைக்கிறது என்பதும் இந்த ஆய்வுக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com