பறவைகளுக்காகப் பயிரிடும் பாரி வள்ளல்.... இயற்கை விவசாயியின் தாராள மனசு

பறவைகளுக்காகப் பயிரிடும் பாரி வள்ளல்.... இயற்கை விவசாயியின் தாராள மனசு
பறவைகளுக்காகப் பயிரிடும் பாரி வள்ளல்.... இயற்கை விவசாயியின் தாராள மனசு

கோயம்புத்தூர் அருகே குளத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி முத்து முருகன், அரை ஏக்கர் நிலத்தில் பறவைகளுக்காக திணை, சோளம் போன்ற பயிர்களை வளர்த்துவருகிறார். இதுபற்றிய விரிவான செய்திக்கட்டுரையை த நியூஸ் மினிட் இணையதளம் வெளியிட்டுள்ளது.

இயற்கை வெளிகளில் சிறகடிக்கும் பறவைகள்மீது தனிப் பிரியம் கொண்டுள்ள அந்த விவசாயி, "நான் செய்வது ஒன்றும் வித்தியாசமல்ல. குழந்தைகளுக்குச் சோறூட்டும்போது காக்கைகளை வேடிக்கை காட்டுகிறோம். குழந்தைகளை திசைதிருப்ப விரும்பினால், கோழிகளைப் பின்தொடரச் செய்கிறோம். மக்கள் பறவைகளை விரும்புவது வழக்கத்திற்கு மாறானது அல்ல" என்கிறார்.

மேலும் பேசும் முத்து முருகன், "பறவைகள் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நண்பர்கள்தான். அவர்கள் எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை. எந்த விமர்சனத்தையும் செய்வதில்லை" என்றும் கவித்துவமாகச் சொல்கிறார். குளத்துப்பாளையத்தில் உள்ள அவரது நிலத்துக்கு ஒருமுறை சென்றால், பறவைகளிடம் அவர் காட்டும் பரிவையும் பாசத்தையும் நீங்கள் உணர்வீர்கள். பறவைகள் கொறிப்பதற்காகவே தானியங்களை வளர்த்துவருகிறார்.

"இந்தப் பண்ணைதான் அவர்களுடைய வீடு. நான் அவற்றை விரட்டுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் என் நிலத்தின் ஒரு பகுதியை பறவைகள் சாப்பிடுவதற்காக அறுவடை செய்யாமல் விட்டுவிடுகிறேன். மீதமுள்ள பயிர்களை மட்டுமே அறுவடை செய்கிறேன். ஊரடங்கு காலத்தில் விவசாயம் கடினமாகும் என்று எனக்குத் தெரியும். அதனால் எதையும் நான் விதைக்கவில்லை. திணைகள், பறவைகளுக்கு உணவு மற்றும் என் மாடுகளுக்குத் தீவனம் " என்று பேசும் முத்துமுருகனின் நிலத்திற்கு மயில்கள் உள்பட பல பறவைகள் வந்துசெல்கின்றன.

விவசாய நிலத்தைத் தேடி வரும் பச்சிகளை அவர் விரட்டுவதில்லை. ஒரு வனவிலங்குப் புகைப்படக்காரரை பறவைகளை படம்பிடிப்பதற்காக ஒருமுறை கிராமத்திற்கு அழைத்திருந்தார். படம்பிடிக்கத் தொடங்கியதும், அவை பறந்தோடிவிட்டன. புகைப்படக்கலைஞர் வருண் அழகர் சுரேந்திரன், தான் எடுத்த பறவைகளின் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அந்த சவாலைப் பற்றி எழுதியிருக்கிறார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த முத்துமுருகன், மிக இளம் வயதிலேயே விவசாயப் பணிக்கு வந்துவிட்டார். "நாம் விவசாயம் செய்யும்போது அந்த உயிரினங்களின் வாழ்க்கையை இடையூறு செய்கிறோம். இந்த இடத்தை நம்முடைய இடம் என்று சொல்வது, அவர்களுக்குத் தெரியாது. உண்மையில் அவர்களுடைய வெளியை நாம் எடுத்துக்கொண்டிருக்கிறோம்" என்கிறார் அந்த இளகிய மனசுக்காரர்.

உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக.... என்ற பாடலை முத்துமுருகன் நினைவூட்டுகிறார். இதெல்லாம் நமக்காக உருவாக்கப்பட்டது என்று நினைக்கிறோம். ஆனால் அதில் ஒரு பொறுப்புணர்வும் பாதுகாப்பும் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார் இந்த பாரிவள்ளல் இயற்கை விவசாயி முத்துமுருகன்.

புகைப்படங்கள்: வருண் அழகர், கோயம்புத்தூர் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com