ஆதி மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? - வியக்க வைக்கும் பாறை ஓவியங்கள்! ஓர் அலசல்

ஆதி மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? - வியக்க வைக்கும் பாறை ஓவியங்கள்! ஓர் அலசல்
ஆதி மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? - வியக்க வைக்கும் பாறை ஓவியங்கள்! ஓர் அலசல்

குகை ஓவியங்கள் மற்றும் அதன் காலம் மூலம் பண்டைய கால மக்களின் வாழ்க்கை முறை தெரிங்துக்கொள்ளலாம் வாங்க.

தற்காலத்தில் பலவகை ஓவியங்கள் இருந்தாலும் கற்கால ஓவியங்களின் சிறப்பே தனி தான். பொதுவாக எல்லோராலும் பேசப்படுவது எல்லோரா, எலிவ்பண்டா ஓவியங்களைத் தான். இவைகள் கற்களையும் மலைகளையும் உளிகளைக்கொண்டு செதுக்கியது. ஆனல், இதற்கு முற்பட்ட காலத்தில் குகைகளிலும், பாறைகளில் தீட்டப்பட்ட ஓவியங்கள் பலவற்றை தொல்லியல் ஆய்வுக் குழுக்கள் கண்டறிந்து வருகிறது. அதில் ஒன்று தான் பீம்பேட்கா பாறை .

பீம்பேட்கா பாறை

பீம்பேட்கா பாறை (Bhimbetka rock shelters:) மத்திய பிரதேசத்தின் ராய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவை வரலாற்றுக்கு முந்தைய மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக அமைந்துள்ளது. வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் நடனம் மற்றும் வேட்டையாடுதல் முதலிய வாழ்க்கை முறையை அறிய இவ்வோவியங்கள் உதவுகின்றன. இவை 1,00,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் போன்ற உயர்நிலை குடியேற்றம் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீம்பேட்கா பாறை முகாம்களில் ஏறத்தாழ 30,000 ஆண்டுகள் பழைமையானது.

பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். மகாபாரத இதிகாசத்தில் வரும் வலிமை மிக்க வீரன், பாண்டவர்களில் ஒருவனான பீமன் இங்கு அமர்ந்ததால் இப்பெயர் பெற்றுள்ளது என்பர்.

தமிழகத்தில் பாறை ஓவியங்கள்

முதன் முதலில் பாறை ஓவியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் சர், ஜார்ஜ் க்ரே என்பவர். இவர், ஆஸ்ரேலியாவில் உள்ள சிட்னியில் முதல் பாறை ஓவியத்தை கண்டுபிடித்தார். அதன் பிறகு 1879ல் ஸ்பெயினில் அல்டமிரா இடத்தில் 12 வயது சிறுமியால் குகை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் அறிஞர்களிடையே ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் 1880 ம் ஆண்டிற்கு பின்னரே பாறை ஓவியங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டத்திற்குள்ளாக, இது 50க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டது தான் ஒரு அதிசயதக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த வகை ஓவியங்கள், தென்ஆர்க்காடு, வடஆர்காடு, நீலகிரி தருமபுரி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஓவியங்கள் வரலாற்று ஆதாரங்களுடன் நமக்கு கிடைத்தது ஆச்சர்யம் அளிக்கும் செய்தியாகும்.

பனைமலை முதல் சித்தன்ன வாசல் வரை

விழுப்புரம் அருகில் உள்ள பனைமலை, ஆர்மா மலை, சித்தன்னவாசல், சமணக்குடை, திருமலைபுரம், கீழவளவு, ஆணைமலை, அரிட்டாபட்டி, கீழக்குயில்குடி இடங்களிலும் பண்டைய கால ஓவியங்கள் காணப்படுகிறது. இவற்றில் சில அக்கால வரலாற்றையும் வாழ்க்கை முறையையும் நமக்கு எடுத்துக்கூறுகிறது.

ஆனால், நாம் வரலாறாக கொண்டுள்ள காலத்திற்கு முற்பட்டே ஓவியங்கள் இருந்துள்ளன. அவைகள் பெரும்பாலும் அழகிய வண்ணப்பூச்சுகளால் தீட்டப்பட்டுள்ளது. இதைதவிற, மண்பாண்டங்களிலும், வண்ணங்களை தீட்டுவதில் பணடையகால மக்கள் புலமைப்பெற்று விளங்கியிருந்தனர். பெரும்பாலும் வண்ணங்கள் சிவப்பு, வெள்ளை கருப்பு வர்ணங்களைக் கொண்டே தீட்டப்பட்டிருக்கிறது.

கொடுமணல் அகழாய்வில் சில கற்பாசிகளில் வெள்ளை வண்ணப்பூச்சு இருக்கிறது. இவை கி.மு.300 முதல் கி.பி.200 எனக் காலம் சொல்கிறது. இந்த ஓவியங்கள் மூலம் தமிழக கற்கால மனிதனுடைய பண்பாட்டினையும், பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் அறிய முடிகிறது.

பாறை ஓவியங்களை எவ்வாறு வகைப்படுத்தி காணலாம்? அவற்றிற்குரிய காலம் என்ன?

பாறைகளில் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்களைக்கொண்டே அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையை அறிந்துக்கொள்ளலாம்.

1.வனவிலங்குகளுடன் விலங்குகளைப்போல் வாழ்ந்த மனிதன் நிலையை ஒத்த ஓவியங்கள்.

இத்தகைய ஓவியம் இருள் சூழ்ந்த இயற்கைக் குகைகளில் வரையப்பட்டுள்ளன. பிரான்ஸ் இத்தாலி, எகிப்து, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இத்தகைய ஓவியங்கள் அதிகம் காணப்படுகிறது. இவை பெரும்பாலும் சிவப்பு, கறுப்பு, வெள்ளை நீலம் ஆகிய வண்ணங்களில் அமைந்தவையாக காணப்படுகிறது. இவை சுமார் 30000 ஆண்டுகளுக்கு முந்தய காலத்தைக்கொண்டதாகும். இக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தன் வாழ்க்கையினை குகைகளில் மறைந்திருந்து ஒரு விலங்குகளைப்போல் வாழ்ந்துவந்ததைக் குறிக்கிறது.

விலங்குகளும் அதை வேட்டையாடும் மனிதனும் போன்ற ஓவியங்கள்

இது இரண்டாம் நிலை ஓவியம். இதில் மனிதன் விலங்குகளை வேட்டையாடும் காட்சிகள் அதிகம் கொண்டவையாகக் காணப்படுகிறது. இதில் உணவுக்காக மனிதன் விலங்குகளை வேட்டையாடும் காலத்தை குறிப்பிடுவதாகக் காட்டுகிறது. இது 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ஆய்வுகள் கூறுகிறது. இக்காலத்து மக்கள் பரிமான வளர்சியை அடைந்து , குகைகளைத் தவிர்த்து தங்களது வாழ்க்கையை காடுகளிலும், நிலங்களிலும் அதிகம் வாழ்ந்ததாக அறிந்துக்கொள்ளலாம்.

மனிதன் போர் காட்சிகளைக்கொண்ட ஓவியங்கள்

இத்தகைய ஓவியங்கள் மனித தொடர்புகள் மற்றும், அவர்களுடிய சடங்கு நிகழ்ச்சிகள், நடன நிகழ்சி காணப்படும். இவ்வகை ஓவியங்கள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ஆய்வாளார்கள் கூறுகிறார்கள்.

”இரத்தக்குடைக்கல்”

தமிழகத்தில் திருவண்ணாமலை செல்லும் வழியில் கீழ்வாலை என்ற ஊரில், மனிதர்கள் இறைவனுக்கு பலி இடுவதற்காக குதிரையை கூட்டிச்செல்லும் ஓவியம் தீட்டப்பெற்ற குன்று ஒன்று உள்ளது. இதனை ”இரத்தக்குடைக்கல்” என்று அழைக்கிறார்கள். இங்கு வரையப்பட்ட ஓவியங்கள் சிவப்பு வண்ணத்தை அதிகமாக கொண்டதால், இங்கு அதிகளவில் பலியிடுதல் நடந்திருப்பதற்கு ஆதாரமாகவும் ஓவியம் காணப்பட்டதல் இப்பெயர் வந்ததாக கூறுகிறார்கள்.

தமிழகத்தை தவிர, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் பல்வேறு இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com