கருக்கலைப்பு மாத்திரையால் பரிதாபமாக உயிரிழந்த பெண் - பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்!

கருக்கலைப்பு மாத்திரையால் பரிதாபமாக உயிரிழந்த பெண் - பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்!
கருக்கலைப்பு மாத்திரையால் பரிதாபமாக உயிரிழந்த பெண் - பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்!

பெங்களூருவில் மருத்துவரின் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரையை எடுத்துக்கொண்ட 33 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கருக்கலைப்பு மாத்திரைகளை யார் எடுத்துக்கொள்ளவேண்டும்? மருத்துவர் பரிந்துரை ஏன் அவசியம்? போன்றவற்றை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.  

11 மாத குழந்தையின் தாயாகிய அந்த பெண் இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது அவர் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்டார். அவரது கணவரிடம் கலந்தாலோசித்த பிறகு கருவை கலைக்க எண்ணி மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

அதன்பிறகு, அவருக்கு அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டதுடன், தாங்கமுடியாத வலியும் ஏற்பட்டுள்ளது. அவரது கணவர் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அந்த பெண் மறுத்துவிட்டதுடன், சுயநினைவையும் இழந்துவிட்டார். உடனடியாக அவரது கணவரும், சகோதரரும் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் சகோதரர், கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பிறகே, தனது சகோதரி மிகுந்த சிரமத்துக்கு ஆளானதாக கூறியுள்ளார். ஆனால் இயற்கைக்கு மாறான மரணம் என்றே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கருக்கலைப்பு மாத்திரைகளை யார் எடுத்துக்கொள்ளவேண்டும்? மருத்துவர் பரிந்துரை ஏன் அவசியம்? போன்றவற்றை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஏனென்றால், தவறான எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகள் உயிரையே எடுத்துவிடும் என்பதை மறக்கவேண்டாம்.

கருக்கலைப்பு மாத்திரைகள் என்றால் என்ன?

கர்ப்பிணிகள் உருவாகியுள்ள கருவை கலைக்க பாதுகாப்பான முறையில் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். கருக்கலைப்பு மாத்திரைகள் பிரத்யேகமாக விற்கப்படுகின்றன. பெரும்பாலும் மருத்துவர் பரிந்துரையின்றிதான் பலரும் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர்.

எப்படியாயினும், கருக்கலைப்புக்கு பல சட்ட விதிமுறைகளும், இதுகுறித்த பலதரப்பட்ட கருத்துகளும் நிலவிவருகின்றன. பொதுவாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும்போது மைஃபெப்ரிஸ்டோன் மற்றும் மிசோப்ரோஸ்டால் போன்ற கருக்கலைப்பு மாத்திரைகள் பொதுவாக கருவை கலைக்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

கருக்கலைப்பு மாத்திரைகள் பாதுகாப்பானதா?

கருவுற்ற ஆரம்பக்கட்டத்திலேயே கருத்தடை மாத்திரைகள் கொடுக்கப்பட்டால் அவை 99.6% பாதுகாப்பானதாகவும், திறம்படவும் செயல்படக்கூடியவை. ஆரம்பகட்ட கருகலைப்புக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் அவை மருத்துவரின் பரிந்துரைப்படிதான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

கருக்கலைப்பு மாத்திரைகள் எவ்வாறு செயல்படுகின்றன?

கருவுற்ற பிறகு அது வளர ப்ரோஜெஸ்ட்ரான் என்ற ஹார்மோன் உதவுகிறது. கரு வேண்டாம் என முடிவெடுத்து கருக்கலைப்பு மாத்திரையை உட்கொள்ளும்போது முதலில் மாத்திரை இந்த ஹார்மோன்களை தடுக்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு இந்த மாத்திரையை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் வயிற்றில் பிடிப்புகள் ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்படும். அதில் ரத்தம் மற்றும் திசுக்கள் கட்டி கட்டிகளாக வெளியேறும். இதனால் சில மணிநேரங்கள் அல்லது சில நாட்களுக்குக்கூட வலி இருக்கலாம்.

வலி தாங்கமுடியாத அளவில் இருக்கும்போது வலிகுறைப்பு மாத்திரைகளுடன் குமட்டல் தடுப்பு மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பர். இது ஒருசில நாட்களில் சரியாகிவிடும்.

மருத்துவ கருக்கலைப்பின் பக்க விளைவுகள்

ஒருமுறை கருக்கலைப்பு செய்தபிறகு சில பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

  • வயிற்றுப்பகுதியில் பிடிப்பு மற்றும் வலி
  • அதீத முதல் மிக அதீத ரத்தப்போக்கு மற்றும் கட்டிகள்
  • வாந்தி மற்றும் அஜீரணம்
  • வயிற்றுப்போக்கு
  • தலைச்சுற்றல் மற்றும் சோர்வு
  • லேசான காய்ச்சல் மற்றும் உடல் வலி

மாதவிடாய் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்துமா கருக்கலைப்பு மாத்திரைகள்?

கருக்கலைப்பு மாத்திரையை எடுத்துக்கொண்டபிறகு சில நாட்கள் மற்றும் சில வாரங்களுக்குக்கூட ரத்தப்போக்கு இருப்பது சகஜம்தான். வயிற்றுப்பகுதியில் தொடர்ந்து வலி இருந்தால் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் அல்லது சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். கருக்கலைப்பிறகு மாதவிடாய் சுழற்சி மாற்றியமைக்கப்படும். மாத்திரை எடுத்துக்கொண்ட 4-8 வாரங்களுக்குப் பிறகு மாதவிடாய் சீராகும்.

மாத்திரை எடுத்துக்கொண்ட பிறகு ஏற்படும் சிக்கல் என்னென்ன?

  • கருக்கலைப்பு மாத்திரை வேலைசெய்யாவிட்டாலோ அல்லது ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டாலோ சில அறிகுறிகள் தென்படலாம்.
  • மாத்திரை எடுத்துக்கொண்ட 24 மணி நேரத்திற்கு பிறகும் ரத்தப்போக்கு ஏற்படாது.
  • இரண்டு நாட்களுக்குப் பிறகும் மிகவும் கடுமையான ரத்தப்போக்கு நிற்காமல் இருத்தல்
  • பெரிய அளவிலான ரத்தக்கட்டிகள்
  • தாங்கமுடியாத வயிற்று வலி
  • தொடர் காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைசுற்றல்

இதுபோன்ற தொடர் அறிகுறிகள் நோய்த்தொற்றுக்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம். எனவே உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். எந்த ஒரு பிரச்னைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் முன்பு உங்களுடைய உடல்நல குறைபாடுகள் குறித்து மருத்துவரிடம் வெளிப்படையாக எடுத்துக்கூறி அவரது ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் No சொல்லிவிட்டால் No தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com