”குறவன், குறத்தி நடனத்தில் ஆபாசம் இருக்கக்கூடாது”-காட்டமான உத்தரவை பிறப்பித்தது நீதிமன்றம்

”குறவன், குறத்தி நடனத்தில் ஆபாசம் இருக்கக்கூடாது”-காட்டமான உத்தரவை பிறப்பித்தது நீதிமன்றம்
”குறவன், குறத்தி நடனத்தில் ஆபாசம் இருக்கக்கூடாது”-காட்டமான உத்தரவை பிறப்பித்தது நீதிமன்றம்

குறவன் குறத்தி ஆட்டம் என்பது, குறவர் சமூகத்தினைச் சார்ந்த ஆணான குறவனும், பெண்ணான குறத்தியும் இசைத்தபடி ஆடும் ஆட்டம். இசைப்பதற்கு உடும்புத் தோலால் ஆன கிஞ்சிராவையோ அல்லது டால்டா டப்பாவையோப் பயன்படுத்தித் தட்டிக்கொண்டு ஆடுவார்கள். தமிழகத்தில் இந்த ஆட்டம், மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டுக் காணப்படுகிறது. குறவரில் நரிக்குறவர் என்று அழைக்கப்படும் சமூகமக்கள் இவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர்.

இக்கலைஞர்கள் சென்னை, திருச்சி, கடலூர், திண்டுக்கல், பழனி, சேலம், இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில், அதிகமாகக் காணப்படுகின்றனர். இந்த ஆட்டம், கரகாட்டத்தின் துணை ஆட்டமாகக் திகழ்கிறது.

இந்நிலையில், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் குறத்தி நடனம் எனும் பெயரில், ஆபாசமான நடனம் ஆட அனுமதி வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கும் விசாரணையும்

மரையைச் சேர்ந்த முத்துமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," திருவிழாக்களில் ஆடல், பாடல் என்ற பெயரில் குறவன்-குறத்தி ஆட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஆட்டத்தில் முன்பு புராணக் கதைகள், நீதிக் கதைகள், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நடத்தப்பட்டன. சமீபகாலமாக ஆபாச நடனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் அதிகளவு இடம் பெறுகின்றன.

இது குறவர் சமூகத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே ஆபாசமான முறையில் குறவன்-குறத்தி ஆட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆபாச குறவன்-குறத்தி ஆட்டங்களை நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு ஏற்கனவே ஒத்திவைக்கபட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு, உத்தரவை பிறப்பித்தனர். அதில், ”சாதி அல்லது பழங்குடியினரை அடையாளப்படுத்தும் விதமான நடனங்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அத்தகைய சமூகத்தைச் சேர்ந்தவர்களை இழிவுபடுத்துவோ, சிறுமைப்படுத்துவதோ நடைபெறாது.

ஆடல் பாடல் எனக்கூறி குறவன் குறத்தி நடனம் எனும் பெயரில், அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஆபாசமான நடனங்கள் ஆட அனுமதிக்கக்கூடாது. அது போல புகார்கள் எழுந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறவன், குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாசமாக நடனமாடினால், அது தொடர்பாக புகாரளிக்க, சைபர் பிரிவில் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். குற்றம் உறுதி செய்யப்பட்டால் நபர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com