ஆர்யன் கான் வழக்கின் விசாரணை வளையத்தில் இளம் நடிகை... யார் இந்த அனன்யா பாண்டே?!

ஆர்யன் கான் வழக்கின் விசாரணை வளையத்தில் இளம் நடிகை... யார் இந்த அனன்யா பாண்டே?!
ஆர்யன் கான் வழக்கின் விசாரணை வளையத்தில் இளம் நடிகை... யார் இந்த அனன்யா பாண்டே?!

ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் அனன்யா பாண்டே யார் என்பது குறித்து பார்ப்போம்.

ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான விவகாரம் அணையாத நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது. ஷாருக் கான் நேற்று ஆர்யனை சந்தித்துப் பேசினார். அதேநேரம் ஆர்யனுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில், அதாவது 3-ம் தேதி மும்பை கடற்பகுதியில் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவான என்சிபி அமைப்பு ஆர்யன் கான் உட்பட 5 பேரை கைது செய்தது. அவர்களிடம் தொடர்ந்து நடைபெற்று விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கு தொடர்புடைய ஒவ்வொரு நபராக அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் முக்கியமானவர் அனன்யா பாண்டே.

யார் இந்த அனன்யா பாண்டே?

பாலிவுட் சினிமாவில் 90-களில் பிரபல நடிகராக இருந்த சங்கி பாண்டேயின் மகள்தான் அனன்யா. 22 வயதாகும் அனன்யாவும் இப்போது பாலிவுட்டில் பணிபுரிந்து வருகிறார். 2019-ல் வெளியான கரண் ஜோஹரின் 'ஸ்டுடன்ட் ஆஃப் தி இயர் 2' படத்தின் மூலம் பாலிவுட் நடிகையாக அறிமுகமானார் அனன்யா. இதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட விருதுகளை வென்ற அனன்யா, இதன்பின் பல பெரிய படங்களில், பெரிய நடிகர்களின் படங்களில் பணியாற்றி வருகிறார்.

முதல் படமே பெரிய ஹிட்டாக அமைந்ததால் இவருக்கு ரசிகர் வட்டம் பெரிதாக அமைந்தது. இதன் காரணமாக அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க இருந்தவர், சினிமா புகழ் காரணமாக அதனை ஒத்திவைத்துவிட்டு நடிப்பு பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆர்யன் கான் உடன் என்ன தொடர்பு?

ஆர்யன் கானைப் போலவே அனன்யா பாண்டேவும் தனது ஆரம்பக் கல்வியை மும்பையில் உள்ள தீருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றவர். 2017-ல் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார் அனன்யா. இருவருக்கும் இடையே பொதுவான நட்பு வட்டம் இருக்கிறது என்பதால், இருவரும் அடிக்கடி கேளிக்கை விடுதிகளில் சந்தித்துள்ளனர். இதனைவிட ஆர்யனின் சகோதரி சுஹானாவின் நெருங்கிய தோழி அனன்யா பாண்டே.

இதனிடையேதான் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வாட்ஸ்அப் சாட்டில் அனன்யா பாண்டே பெயர் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது. இதேபோல், அனன்யா பாண்டே ஆர்யன் கானுக்கு போதை மருந்து விநியோகஸ்தர்களின் எண்களை வழங்கியதாக இதே வாட்ஸ்அப் சாட்டில் சொல்லப்பட்டுள்ளதாக என்சிபி வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், அனன்யா ஆர்யனுக்கு மூன்று முறை போதைப்பொருள் கிடைக்க உதவியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் தொடர்பாக நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அனன்யா பாண்டேயிடம் இரண்டு மணி நேரம் விசாரனை நடத்தினர். பின்னர் அனன்யாவை தங்கள் அலுவலகத்துக்கு வரவைத்து விசாரணை நடத்தினர்.

அனன்யா இப்போது இந்தியை தாண்டி தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் `லைகர்' என்ற பாக்சிங் படத்திலும் நடித்து வருகிறார். வம்சி பைடிப்பள்ளி இயக்கவுள்ள விஜய்யின் அடுத்தப் படத்திலும் அனன்யா நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com