அன்றும் இன்றும் என்றும் இட்லி ! இது வெறும் உணவு அல்ல 'எமோஷன்'

அன்றும் இன்றும் என்றும் இட்லி ! இது வெறும் உணவு அல்ல 'எமோஷன்'
அன்றும் இன்றும் என்றும் இட்லி ! இது வெறும் உணவு அல்ல 'எமோஷன்'

இட்லி. தமிழகத்தை பொறுத்த வரை இது வெறும் உணவு அல்ல. 'எமோஷன்' என்றே சொல்லலாம். ஒரு காலத்தில் இட்லி என்றால் விசேஷ நாட்களில் மட்டுமே கிடைக்கும் அரிய உணவு என்று நினைவுகளை இச்சுக்கொட்டும் பெரியவர்கள் இன்று இருக்கிறார்கள். ஆனால் இன்று அப்படி அல்ல. வாரத்தில் பெரும்பான்மையான நாட்களில் இட்லி இடம்பிடித்துவிடுகிறது. இட்லி என்றால் அவ்வளவு சாதாரணம் இல்லை. கைக்குழந்தை தொடங்கி முதியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தி போகும் உணவு. 

காய்ச்சல் வந்து படுத்திருக்கும் நோயாளிக்கும் கைகொடுக்கும் இட்லி. அவ்வளவு ஏன்? சாப்பிட முடியாத நிலையிலும் கரைத்து குடிக்கும் திரவ உணவாக இட்லி மாறிவிடும். இப்படி நம் வாழ்வோடு ஒன்றி போன இட்லியை இன்று சமூக வலைதளங்களில் #WorldIdliDay என்ற ஹேஸ்டேக்கில் இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர். 

உலக இட்லி தினத்தை யுனெஸ்கோ அறிவித்துவிட்டது என்று சொல்லி இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அது ஒரு புரளி என்று கூறப்படுகிறது. எது எப்படியோ நம் இட்லியை நினைவுப்படுத்தும் தினமாக இன்றைய தினம் இருக்கிறது.

நம்முடனே ஒன்றி போனாலும் இட்லி தமிழகத்தின் உணவு இல்லை என்று கூறுகிறார்கள். இந்தோனேஷியாவில் 'கெட்லி' என்ற உணவு இருந்தது. அது தான் இங்கு இட்லியாக வந்தது என்கிறது ஒரு குரூப். கன்னட மக்களின் 'இல்லாலிகே' தான் இட்லி ஆனது என்கிறது ஒரு குரூப். வரலாற விடுங்க 'இட்லினா இப்ப இந்தியா தான்' என்று முடிவு சொல்கிறது ஒரு குரூப். 

புளிக்கவைத்து வேகவைத்தால் தமிழ்நாட்டு இட்லி, புளிக்காத மாவை வேக வைத்தால் குஜராத் டோக்ளா, புளித்த மாவில் கள் சேர்த்து இனிப்பு சேர்த்தால் கேரளா வட்டப்பம், மங்களூர் பக்கம் சன்னாஸ் என்று பல பெயர்களில் இட்லி இந்தியாவை சுற்றி வருகிறது.

இதை சாப்பிட்டால் செரிக்குமோ செரிக்காதோ என்ற சந்தேக பார்வை வீசப்படும் உணவுகள் மத்தியில் இட்லி என்றால் அனைவரும் தலையசைத்துவிடுவது இட்லியின் சிறப்பு. பூண்டு இட்லி, காய்கறி இட்லி, கீரை இட்லி, பொடி இட்லி என இட்லியில் பல வகைகளை கொண்டு வந்த பெருமை நம் வீட்டு தாய்மார்களுக்கே உரித்தானது.

துரித மாவுகள், வாரக்கணக்கில் கெடாத மாவுகள் என்று இட்லியின் தரம் இன்று குறைவது போல இருந்தாலும் பல வீடுகளில் இன்னமும் மல்லிகப்பூ இட்லிக்கள் பூத்துக்கொண்டு தான் இருக்கின்றன. 

சொர்க்கத்தின் காலை எப்படி இருக்கும் என்று கேட்டால் ''4 இட்லி, ஒரு மெது வடை, ஒரு காஃபி அவ்வளவுதான்'' என்று நகைச்சுவையாக சிரிக்கிறார்கள் இட்லி பிரியர்கள்!
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com