“இதயநோயில் இந்தியா முதலிடம் பிடிக்கலாம்” - ஆய்வுகள் எச்சரிக்கை

“இதயநோயில் இந்தியா முதலிடம் பிடிக்கலாம்” - ஆய்வுகள் எச்சரிக்கை
“இதயநோயில் இந்தியா முதலிடம் பிடிக்கலாம்” - ஆய்வுகள் எச்சரிக்கை

இதய நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் வருடத்திற்கு 17,500,000 மக்கள் இதய நோயின் காரணமாக உயிரிழப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்தியாவில் இதய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மற்ற நோயால் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் 28% அதிகம். புள்ளி விவரத்தின்படி 1990ம் ஆண்டு 1.3 மில்லியன் பேரும், 2016ம் ஆண்டின் படி 2.8 மில்லியன் பேரும் இதய நோயால் உயிரிழந்துள்ளனர். 

இது தொடர்ந்தால் உலக அளவில் இதய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும். இதய நோயினால் பாதிக்கப்படுபவர்களில் 50 சதவீதத்தினர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்றும், 25 சதவீதத்தினர் 40 வயதுக்குட்பட்டோர் என்றும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

நமக்காக ஆயுள் முழுவதும் துடிக்கும் இதயத்தை பாதுகாக்க சில டிப்ஸ்...

ஆரோக்யமான உணவுகள்: 

இதயத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உணவுக்கட்டுப்பாடு. அதிக அளவில் காய்கறி, பழங்களை உண்பது. கட்டுப்பாடான அசைவ உணவு. உப்பு, சர்க்கரையின் அளவை தேவையான அளவு உணவில் சேர்த்துக்கொள்வது போன்ற செயல்கள் இதயத்தை பாதுகாக்கும்.

உடற்பயிற்சி: 

இன்றைய நாட்களில் பிசி வாழ்க்கையில் நாம் உடற்பயிற்சியை மறந்தே விட்டோம். ஆரோக்யமான உடல்நிலைக்கு அன்றாடம் உடற்பயிற்சியை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி செய்வது கட்டாயம் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

புகை; மது வேண்டாம்: 

இதய ஆரோக்யத்துக்கு ஆபத்தான புகை, மதுவை அடியோடு நிறுத்த வேண்டும். புகை, மதுவை நிறுத்திய நிமிடத்தில் இருந்து நீங்கள் இதய நோயிலிருந்து விலகி வருகிறீர்கள் என்பதை உணர வேண்டும்.

இதயம் பேணுங்கள்:

நம்முடைய இதயத்தை நாம் பேணிக்காப்பதில் நாம் குறை வைத்தல் கூடாது. மருத்துவர்களை அணுகி இதய செயல்பாடுகள் குறித்தும் ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட உடல்நலம் சார்ந்த விஷயங்களை ஆலோசித்துக்கொள்ள வேண்டும்.

அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்: 

இதய நோய்க்கான அறிகுறிகள் குறித்தும் அதற்கான முதலுதவி குறித்தும் தெரிந்துகொள்ளுதல் அவசியம். குடும்பத்தினருடன் சேர்ந்து இருக்கும் போது 70% பேருக்கு ஹார்ட் அட்டாக் வருவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மேற்கொண்டுள்ள சதவீதமான ஆட்கள் தனிமையில் உள்ளபோது ஹார்ட் அட்டாக் வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆக, நம்முடையை விழிப்புணர்வு இதய நோயால் பாதிக்கப்படுவர்களை காப்பாற்ற உதவும். 

இன்றைய தேதிக்கு இதய நோய் என்பது உலக அளவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய நோயாக உள்ளது. நாம் அன்றாட வாழ்வில் செய்யும் சிறுசிறு மாற்றங்கள் நம்முடைய ஆரோக்யமான வாழ்க்கைக்கு நிச்சயம் வழிவகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com