அசாம் தேர்தல் அரசியலில் 'ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள்' முக்கியத்துவம் பெறுவது ஏன்?

அசாம் தேர்தல் அரசியலில் 'ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள்' முக்கியத்துவம் பெறுவது ஏன்?
அசாம் தேர்தல் அரசியலில் 'ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள்' முக்கியத்துவம் பெறுவது ஏன்?

அசாம் மாநில விலங்கான காண்டாமிருகம், அம்மாநில மக்களுடன் ஒரு நீண்ட நெடிய தொடர்பைக் கொண்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற இந்த ஒற்றை கொம்பு காண்டாமிருகம் 'அசாமின் பெருமிதம்' (Pride of Assam) ஆகக் கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் 'ஒற்றை கொம்பு காண்டாமிருக்கத்தின்' பங்கு முக்கியமானது. எப்படி? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.

அண்மையில் அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்காவின் தொகுதிக்குட்பட்ட போகாஹாட்டில் நடந்த ஒரு பேரணியின்போது பேசிய பிரதமர் மோடி, காண்டாமிருகங்களைக் கொல்லும் வேட்டைக்காரர்களை காங்கிரஸ் வளர்த்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், பாஜக இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தியுள்ளது என்றார்.

அசாமின் பெருமையாக மாறிய காண்டாமிருகம்!

நீண்ட காலமாக, காண்டாமிருகங்கள் அசாம் மாநில மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான தொடர்பை பெற்றுள்ளன. "அசாம் இயக்கம் தொடங்கப்பட்ட (1979-85) காலகட்டத்தில்தான் காண்டாமிருகம், அசாமின் பெருமையாக மாறியது" என்று திப்ருக்ரா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் உதவி பேராசிரியர் கவுஸ்தூப் தேகா கூறுகிறார். "அசாமின் புகழ்பெற்ற கலாசாரம், பிஹூ பாடல்கள் யாவும் காண்டாமிருக்கத்தை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டதுதான்" என்கிறார் அவர்.

காசிரங்கா தேசிய பூங்காவின் வனவிலங்கு வார்டன் உத்தம் சைக்கியா கூறுகையில், "அசாம் மக்கள் காண்டாமிருகத்துடன் உணர்வுபூர்வமான பிணைப்பைக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, ஒரு காண்டாமிருகம் கொல்லப்படும்போது, அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்பெல்லாம் இதுபற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், இப்போது அப்படியில்லை. ஒரு காண்டாமிருகம் கொல்லப்பட்டதும், அது சமூக ஊடகங்களில் அது உடனடியாக செய்தியாகி பரவிவிடுகிறது" என்கிறார்.

அரசியலில் காண்டாமிருக்கத்தின் பங்கு!

அசாமின் அரசியல் கதைகளில் காண்டாமிருகம் ஒரு பகுதியாகவே வலம் வந்திருக்கிறது என்கிறார் உதவிப் பேராசிரியர் கவுஸ்தூப் தேகா. அவர் கூறுகையில், " நிலம், வளங்கள், புலம்பெயர்ந்தோரின் வருகை, வேட்டையாடுதல் ஆகியவை அனைத்தும் அம்மாநில மக்களின் கட்டுபாட்டுக்கு உட்பட்டது" என்கிறார்.

அசாமில் பாஜகவின் பிரசாரத்தில் காண்டாமிருகத்துக்கு எப்போதும் இன்றியமையாத பங்கு இருக்கும். "அசாமை பொறுத்தவரை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வேட்டையாடுதல் குறைந்துவிட்டது. எனினும், உண்மையில் இந்த சாத்தியமானதற்கு காரணம் அரசாங்கத்தின் நடவடிக்கையா அல்லது தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமா என்பதை நம்மால் உறுதியாக சொல்ல முடியாது" என்கிறார் காசிரங்கா தேசிய பூங்காவின் வனவிலங்கு வார்டன் உத்தம் சைக்கியா.

காசிரங்காவில் காண்டாமிருகங்கள் வேட்டையாடுப்படுவதாக 2013 வரையிலான ஆண்டுகளில் ஏராளமான வழக்குகள் பதிவாகியிருந்தன. 10 ஆண்டுகளில், 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில்தான் காண்டாமிருகங்கள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 27 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த எண்ணிக்கையானது 2015-ல் 17 ஆகவும், 2016-ல் 18 ஆகவும் குறைந்தது. 2017 மற்றும் 2018 ஆண்டுகளில், ஆறு சம்பவங்களும், 2019-ல் மூன்று சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

"2020-ஆம் ஆண்டில், இரண்டு வழக்குகள் இருந்தன, 2021-ஆம் ஆண்டில் இதுவரை எந்த வழக்குகளும் இல்லை" என்று பூங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் புள்ளிவிவரங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. 2018-ஆம் ஆண்டின் காண்டாமிருக கணக்கெடுப்பின்படி, காசிரங்காவில் மட்டும் 2,413 காண்டாமிருகங்கள் உள்ளன.

இதனை அடிப்படையாக கொண்டுதான் பாஜக காங்கிரஸை குற்றம்சாட்டி வருகிறது. 'காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காண்டாமிருகங்களை வேட்டையாடுபவர்களை கண்டுகொள்ளவில்லை. நாங்கள் வந்த பின்னர் வேட்டையாடும் எண்ணிக்கையும், அது தொடர்பான வழக்குகளில் குறைந்துள்ளன' என தனது மேடைகளில் முழங்கி வருகிறது பாஜக. காண்டாமிருகம் இப்போது ஒரு "அசாமி வளமாகவும்" காண்டாமிருக பாதுகாப்பையும் நல்லாட்சியின் அடையாளமாகவும் அம்மாநில மக்கள் கருதுகின்றனர். சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களை ஓர் அரசால் பாதுகாக்க முடிந்தால், அது சட்டம் ஒழுங்கு மீதான கட்டுப்பாடாகக் கருதப்படுகிறது.

காசிரங்காவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய இரண்டு தொகுதிகளான போகாஹாட் மற்றும் கலியாபோரில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் (ஆறு தொகுதிகளை உள்ளடக்கியது), 'காண்டாமிருகத்தை பாதுகாப்போம்' என்று சொல்வது வழக்கமான வாக்குறுதிதான். இருப்பினும், இந்த ஆண்டு பாரம்பரிய தேர்தல் பிரசாரத்திலிருந்து சில மாற்றங்கள் தென்படுகின்றன. ஏனெனில் உள்ளூர், பிராந்தியக்காரர்கள் தேர்தல் காட்சிகளுக்குள் தென்படுகின்றனர்.

உதாரணமாக ரைஜோர் தள் மற்றும் நில உரிமை ஆர்வலர் பிரணாப் டோலி (காங்கிரஸ் தலைமையிலான ஆதரவு) ஆகியோர் வெறுமனே காண்டாமிருகத்தின் பாதுகாப்பைப் பற்றி மட்டும் பேசவில்லை. உள்ளூர் மக்களின் நில உரிமைகள் பற்றியும் பேசுகிறார். காசிங்கரா பூங்கா பரப்பளவு விரிவாக்கம் செய்யப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. 1974-ம் ஆண்டு இந்த பூங்கா தோற்றுவிக்கப்படும்போது, அதன் பரப்பளவு 430 சதுர கிலோமீட்டராக இருந்தது. விரிவாக்கலுக்குப் பின் பூங்கா இப்போது 914 சதுர கிலோமீட்டராக உள்ளது.

அண்மையில் இதன் விரிவாக்கத்தை செப்டம்பரில் மாநில அரசு அறிவித்தது. இதன் விளைவாக, காண்டாமிருகத்தை காக்கிறோம் என்ற பெயரில், உள்ளூர் சமூகங்கள், பூங்காவின் விளிம்பில் வசிப்பவர்கள், வெளியேற்றப்படுகிறார்கள் என்ற புகாரும் எழுந்துள்ளது.

- தகவல் உறுதுணை: The Indian Express

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com