யானைகள் தொடர்ந்து உயிரிழக்க இதுவும் ஒரு காரணம் தான் - கோவை வன அலுவலர்
மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் யானை சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருவதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
<கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகதிற்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியில் ஆண் காட்டு யானையொன்று உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காட்டுக்குள் கீழே விழுந்து விட்டது. மீண்டும் ஏழ வழியின்றி உயிருக்கு போராடிய யானைக்கு வனத்துறை மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. கோவை வனக்கோட்டத்தில் கடந்த ஆறுமாத காலத்தில் மட்டும் பதினாறு காட்டு யானைகள் இறந்துள்ளன. கடந்த மாதம் மேட்டுப்பாளையத்தில் ஆண் யானையொன்று சுட்டு கொல்லப்பட்ட நிலையில், மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள சிறுமுகை வனப்பகுதியில் எட்டு யானைகள் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் இறந்து போயின.
இறந்த யானைகள் பெரும்பாலும் இருபது வயதிற்கு உட்பட்டவை என்பதால் இந்த இளம் யானைகளுக்கு எப்படி திடீர் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது என்ற கேள்வி எழுந்தது. கோவை வனக்கோட்டதில் யானைகளின் தொடர் மரணங்கள் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியதோடு இதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கைகயும் வலுத்தன.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தலைமையில் பதினோரு பேர் கொண்ட சிறப்பு உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு யானைகளின் தொடர் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிந்து ஆறு மாதத்தில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
இந்நிலையில் இன்று இறந்த யானையின் உடல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு யானையின் சில உடல் பாகங்கள் ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வில் மற்ற யானைகளுடன் நடைபெற்ற மோதலில் யானையின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் முழுமையான ஆய்விற்கு பின்னரே யானையின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய இயலும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேட்டியளித்த மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், “இவ்வாண்டு கோவை வனக்கோட்டதில் இறந்த யானைகளில் நான்கு யானைகள் அவற்றுக்கிடையே நடைபெற்ற மோதலால் காயம்ஏற்பட்டு இறந்திருக்கலாம் என முதற்கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. பவானியாற்றின் நீர்தேக்க பகுதியான பெதிக்குட்டை பகுதியில் எட்டு யானைகள் உடல்நலக்குறைவால் இறந்துள்ளது குறித்து முழுமையான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
காட்டுக்குள் பரவி வரும் சீமை கருவேலை உள்ளிட்ட தாவரங்களாலா அல்லது நீர் மாசுபாடா என ஆய்வறிக்கைக்கு பின்னரே தெரிய வரும். இந்த முழுமையான அறிக்கை கிடைக்க இன்னும் ஓராண்டாகலாம். அது வரை யானைகளின் உடல்நலக்குறைவிற்கு இது தான் காரணம் என எதையும் உறுதியாக கூற இயலாது” என்றார்.
கர்நாடகா மற்றும் கேரள காடுகளை ஒன்றிணைக்கும் மிக முக்கிய வலசை பாதை கொண்ட கோவை வனக்கோட்டதில் வரிசையாய் யானைகள் இறந்து வருவது இயற்கை நல ஆர்வலர்களை கவலையடைய வைத்துள்ளது.