திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அமணலிங்கேஸ்வரர் கோயில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அருவிக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையால் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியின் முக்கிய நீர்ப் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு போன்ற பகுதிகளில் இருந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு பஞ்சலிங்க அருவியில் தன்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால், அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அடிவாரத்தில் இருக்கும் மும்மூர்த்தி தலமான அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் உண்டியல்கள் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, வனத்துறை அதிகாரிகள் அருவியின் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.