
காட்டு யானைக்கும், கும்கி யானைக்கும் இடையே ஏற்பட்டமோதலில், கும்கி யானைக்கு லேசான காயம் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள பாக்கன்னா பகுதியில் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக முகாமிட்டுள்ள ஒற்றை ஆண் யானை அப்பகுதி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது. இதனையடுத்து அந்த ஒற்றை யானையை விரட்ட முதுமலையில் இருந்து இரண்டு கும்கி யானைகள் பாக்கன்னா பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. கும்கியானைகளான முதுமலை மற்றும் சேரன், கட்டி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று யானைகள் கட்டி வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு வந்த ஒற்றை யானை, யாரும் எதிர்பாராதவிதமாக கும்கி யானை முதுமலையை தாக்கியது. சுதாரித்து கொண்ட கும்கி யானை பதில் தாக்குதலை தொடுத்தது. சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக இரண்டு யானைகள் இடையே கடும் மோதல் நிலவியது. உடனடியாக அங்கு விரைந்த பாகன்கள் மற்றும் வனத்துறையினர் தீ பந்தங்களை கொளுத்தி ஒற்றை யானையை விரட்டினர்.
இந்த மோதலில் கும்கி யானைக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது. மோதலின் போது கும்கி யானையின் காலில் பேடி எனப்படும் சங்கிலி கட்டப்பட்டு இருந்ததால், அதனால் வேகமாக செயல்படமுடியவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று இரவும் அந்த ஒற்றை யானை மீண்டும் கும்கி யானை கட்டப்பட்ட இடம்நோக்கி வந்துள்ளது. விரைந்து செயல்பட்ட வனத்துறையினர் காட்டு யானையை விரட்டி அடித்தனர். காட்டு யானை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் காரணத்தால் கும்கி யானைகளை வைத்து விரட்டுவது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் சுற்றி கிராமங்கள் இருப்பதனால் காட்டு யானயை வனப்பகுதிக்குள் விரட்டுவதிலும் சிக்கல் உள்ளது. எனவே காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.