சென்னை அரசு பொதுமருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு இரண்டு போலீசார் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாகவே ஒருவிதமான மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. சிலர் டெங்கு அறிகுறிகளாடும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஏதாவது காய்ச்சல் என்றால் காலம் தாழ்த்தாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே சென்னை அரசு பொதுமருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு இரண்டு போலீசார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிம்பு, பார்த்திபன் ஆகிய இரு போலீசாரும் காய்ச்சலுக்கான தனி பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவருக்கும் டெங்கு காய்ச்சல் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் டெங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமருத்துவத் துறை இயக்குனர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் 3 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் முதியவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 19 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து நான்கு நாட்களாகியும் காய்ச்சல் குறையாத நிலையில் இருந்த 3 சிறார்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.