''அடுத்த 40 ஆண்டுகளில்...'' - காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் பில்கேட்ஸ்!
கொரோனா தொற்றுநோயைப் போலவே காலநிலை மாற்றம் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை செய்துள்ளார்.
கொரோனா சூழலில் தனது அறக்கட்டளை மூலம் கொரோனாவை எதிர்த்துப்போராட 1 லட்சம் பில்லியன் டாலர்கள் அறிவித்திருந்தவர், தற்போது தனது இணையதளத்தில் “தொற்றுநோயைப் போன்றே காலநிலை மாற்றமும் மோசமாக இருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.
பல ஆண்டுகளாக பல்வேறு தொற்றுநோய்களுக்கு பில்கேட்ஸின் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பல தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. தற்போது கொரோனாவுக்கும் தயாரிக்கிறது. உலகளாவிய தொற்றுநோயால் ஏற்படக்கூடிய பேரழிவுக்குறித்து, 2015 ஆம் ஆண்டே பில்கேட்ஸ் எச்சரிக்கை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ’தற்போது மீண்டும் பேரழிவு ஏற்படக்கூடிய காலநிலை மாற்றத்திற்கு தயாராக வேண்டும். அதன் விளைவு மோசமாக இருக்கும். வெப்பநிலைக் காரணமாக 1 லட்சம் பேருக்கு 14 பேர் இறக்கக்கூடும்’ என்றதோடு கொரோனா வைரஸ் நோயுடன் காலநிலை மாற்றத்தையும் ஒப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் ’அடுத்த 40 ஆண்டுகளில் உலக வெப்பநிலையின் அதிகரிப்பு உலகளாவிய இறப்பு விகிதங்களை அதிகரிக்கும். அதிகமான வெப்பநிலை என்றால் 1 லட்சம் பேருக்கு 73 பேர் இறக்கக்கூடும். வெப்பநிலையைப் போலவே பொருளாதார தாக்கமும் அதிகரிக்கும்’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.