40 நாட்களில் 3வது மரணம் - சிவிங்கி புலிகள் இந்தியாவில் வாழ உகந்த விலங்கு இல்லையா?

இந்தியாவில் வாழ்ந்து வந்த ஆசிய சிவிங்கப் புலிகளை, இவ்வளவு பெரிய நாட்டில் காப்பாற்ற முடியாமல் ஆப்ரிக்க சிவிங்கப் புலிகளை கொண்டுவருவது எப்படி பெருமைக்குரிய செயல்பாடாக இருக்கும்?
Cheetah
Cheetah File Image

இந்தியாவில் முற்றிலும் அழிந்துவிட்ட இனமாகக் கருதப்பட்ட சிவிங்கிப் புலிகளை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் நமீபியாவிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அதனடிப்படையில் நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகள், சிறப்பு சரக்கு விமானம் மூலம் இந்தியாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்டன. அவற்றை மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி திறந்துவிட்டார். உலகில் முதன்முறையாகக் கண்டங்களுக்கு இடையே வன உயிரினங்களுக்கான பரிமாற்றம் நிகழ்ந்தது. இந்த நிலையில், மேலும் 12 சிவிங்கிப் புலிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்டன. இவ்வாறு 20 சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன.

ஆப்ரிக்க வனப்பரப்பில் வாழ்ந்து பழக்கப்பட்ட இவை முற்றிலும் வேறுபட்ட இந்திய வன நிலத்தில் நீண்டகாலம் தாக்குப் பிடிக்குமா? என்பது கேள்விக்குறியாக இருந்துவந்தது. இச்சூழலில்தான் சாஷா, உதய் என்ற இரு சிவிங்கி புலிகள் உயிரிழந்த நிலையில் மூன்றாவதாக தக்‌ஷா என்ற சிவிங்கி புலியும் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தது. இதன் மூலம் கடந்த 40 நாட்களில் மூன்றாவது சிவங்கி புலி உயிரிழந்திருக்கிறது. மொத்தம் 20 சிவிங்கி புலிகள் அழைத்து வரப்பட்ட நிலையில், இப்போது 17 மட்டுமே உயிருடன் உள்ளன.

பா.சதீஸ் முத்து கோபால்
பா.சதீஸ் முத்து கோபால்

சிவிங்கி புலிகள் இந்தியாவில் வாழ உகந்த விலங்கு இல்லையா? அவைகளின் இறப்புக்கு என்ன காரணம்? வனவிலங்குகளை நாடுவிட்டு நாடு பரிமாற்றம் செய்வது சரியான நடைமுறையா என்பது பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலரும் எழுத்தாளருமான பா.சதீஸ் முத்து கோபாலிடம் கேட்டோம். அவர் நம்மிடம் விவரிக்கையில், ‘’இந்தியா என்ற பெரும் நிலப்பரப்பின் சமவெளிகளில் சுற்றித் திரிந்த உயிரினம் ஆசிய சிவிங்கப்புலி. இந்தியா மட்டுமல்லாது ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற இடங்களிலும் இவை இருந்தன. தமிழ் நாட்டின் சத்தியமங்கலம் வரை இருந்ததாக கூறப்படுகிறது. 1948-ஆம் ஆண்டு இந்தியாவின் கடைசியாக வாழ்ந்த மூன்று சிவிங்கப் புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. இன்றும் ஈரானில் மிகச் சொற்ப எண்ணிக்கையில் இவை மிச்சம் இருக்கின்றன. 

அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதி மட்டுமே நமக்கு காடாக தெரிகிறது. மாறாக புல்வெளிகள் நிறைந்த சமவெளிப் பகுதிகளையும் காடாக கருதி அங்கிருக்கும் உயிர்ச் சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிங்கம், வேங்கைப் புலி, சிறுத்தைப் புலி , பனிச் சிறுத்தை என பூனை இனத்தின் பல உயிரினங்களை கொண்டிருந்த நம் தேசம் சிவிங்கப் புலிகளை இழந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்தியாவில் வாழ்ந்த சிவிங்கப்புலி  ஒன்றை சுவிட்சர்லாந்து அருங்காட்சியகம், கண்ணாடி பெட்டிக்குள் பத்திரமாக வைத்து பாதுகாக்கிறது. இந்திய விடுதலைக்கு முன்பாக இவை ஒரு சில மன்னர்களால் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டன.

ஜெய்ராம் ரமேஷ் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது ஆப்ரிக்க சிவிங்கப் புலிகளை இந்தியாவிற்கு கொண்டு வர சில முயற்சிகளை செய்தார். தற்போதைய மத்திய அரசு அதை செய்து காட்டியிருக்கிறது. நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு சிவிங்கப் புலிகள்  சில மாதங்களுக்கு முன்பாக கொண்டுவரப்பட்டன. ஆனால் இவை இந்தியாவில் வாழ்ந்த ஆசிய சிவிங்கப்புலி இனம் அல்ல. இவை ஆப்ரிக்க சிவிங்கப் புலிகள் (African Cheetah).

இந்த வேறுபாட்டை தெளிவாகக் கூற வேண்டிய ஊடகங்கள், பல நேரங்களில் இந்தியாவில் தற்போதும் வாழ்ந்து வரும் சிறுத்தைகளின் படங்களை இந்த செய்திகளோடு வெளியிட்டு மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. எளிய உதாரணம் மூலம் சொல்ல வேண்டுமென்றால் வால்பாறையில் தென்படும் சிறுத்தைகள் உயரமான மரங்களில் எளிதாக ஏறும். சிவிங்கப்புலிகளால் அது முடியாது. சிறுத்தைகளுக்கு உடலில் கரு வளையங்களின் நடுவே புள்ளிகள் இருக்கும். சிவிங்கப்புலிகள் வெறும் புள்ளிகளோடு இருக்கும்.

Cheetah
Cheetah

தற்போது மத்தியப் பிரதேசத்தில் குனோ பல்பூர் காடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்ரிக்க சிவிங்கப் புலிகள் இந்திய காடுகளுக்கு பொருத்தமாக இருக்குமா என்ற விவாதமும் இன்னும் மிச்சம் இருக்கிறது. அவை இதுவரை சந்திக்காத நில அமைப்பையும் இரை விலங்குகளையும் சந்திக்கிறது. ஆப்ரிக்காவில் இம்பாலா என்ற மானை வேட்டையாடி பழகிய இவை இந்தியாவில் இருக்கும் வெளி மான்களை எப்படி வேட்டையாடும்? இருந்தாலும் சிவிங்கப் புலியின் பெயரால் இந்தியாவில் இருக்கும் சில புல்வெளிக் காடுகள் காப்பாற்றப்படுமானால் இவற்றை இந்திய காடுகளில் அறிமுகப்படுத்தலாம் என்ற விவாதமும் இருந்தது. காரணம் ஒரு உயிரினத்தை பாதுகாப்பது என்பது அவற்றை மட்டுமே பாதுகாப்பது அல்ல. அதன் மூலமாக ஒரு வாழிடத்தையும், அந்த வாழிடத்தின் பல்லுயிர்ச் சூழலையும் பாதுகாக்க முடியும் என்பது தான். வேங்கைப்பு லிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைக்கும் அதுவே காரணம்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த ஆசிய சிங்கங்கள் தற்போது குஜராத் மாநிலத்தில் மட்டும் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் சிலவற்றை வேறு மாநிலங்களுக்கு இடம் மாற்ற தற்போது வரை குஜராத் அரசு மறுக்கிறது. ஆசிய சிங்கங்களும் அவை ஏற்கனவே வாழ்ந்த நிலப்பரப்பில் தனியாக பிரித்து பாதுகாக்கப்படுவது அவசியம். ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டாலும் ஆசிய சிங்கங்களை அழியாமல் காப்பாற்ற முடியும். குஜராத்தில் மட்டுமே காணப்படும் ஆசிய சிங்கங்கள் உலகின் வேறு எங்குமே இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

இந்தியாவில் வாழ்ந்து வந்த ஆசிய சிவிங்கப் புலிகளை, இவ்வளவு பெரிய நாட்டில் காப்பாற்ற முடியாமல் ஆப்ரிக்க சிவிங்கப் புலிகளை  கொண்டுவருவது எப்படி பெருமைக்குரிய செயல்பாடாக இருக்கும்? சிவிங்கப் புலிகள் மீது இருக்கும் அக்கறையை ஆசிய சிங்கங்களை காப்பாற்றுவதிலும் இருக்க வேண்டாமா? இந்தியாவில் மட்டுமே காணப்படும் கானமயில் (Great Indian Bustard), வரகுக் கோழி (Lesser Floricon) போன்ற பறவையினங்களில் எண்ணிக்கை மிகவும் சுருங்கி அவை அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் வரையாடு, இந்தியக் கடலோரங்களில் காணப்படும் ஆவுளியா என பல உயிரினங்கள் அருகி வரும் நிலையில் அவற்றை பாதுகாப்பது இன்னும் அவசியமானது. 

Cheetah
Cheetah

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிவிங்கப் புலிகளில் மூன்று இறந்துவிட்டன. அதே நேரம் ஒரு சிவிங்கப் புலி நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. இதுவரை அவை சந்திக்காத நிலப்பரப்பில் புள்ளி மான்களை வேட்டையாடி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுமா என்பது வரும் காலங்களில் தான் தெரியும். ஆப்ரிக்க சிவிங்கப் புலிகளுக்கு பதிலாக ஈரானிடம் ஆசிய சிவிங்கப் புலிகளைப் பெற்று மாற்றாக ஆசிய சிங்கங்களை ஈரானிடம் கொடுத்து இரண்டு உயிரினங்களையும் அதன் பூர்விக நிலப்பரப்புக்களில் பாதுகாக்க முனைந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். காட்டுயிர் பாதுகாப்பில் மற்ற நாடுகளுக்கும் இது முன்னுதாரணமாக இருந்திருக்கும். அடிப்படையில் ஒரு உயிரினத்தை பாதுகாப்பதன் மூலம் அது வாழும் நிலப்பரப்பையும், பல்லுயிர்ச் சூழலையும் பாதுகாக்க முடியும் என்ற புரிதல் மக்களுக்கும், அக்கறை அரசுக்கும் இருக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com