மருத்துவம் படிக்க ஏன் இந்திய மாணவர்கள் உக்ரைனை தேர்ந்தெடுக்க வேண்டும்? - காரணம் இதுதான்!

மருத்துவம் படிக்க ஏன் இந்திய மாணவர்கள் உக்ரைனை தேர்ந்தெடுக்க வேண்டும்? - காரணம் இதுதான்!
மருத்துவம் படிக்க ஏன் இந்திய மாணவர்கள் உக்ரைனை தேர்ந்தெடுக்க வேண்டும்? - காரணம் இதுதான்!

மருத்துவம் படிக்க ஏன் இந்திய மாணவர்கள் உக்ரைனை தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பது, போருக்கு மத்தியில், எழுப்பப்படும் முக்கிய கேள்வியாக இருக்கிறது. இதற்கான காரணங்களை பார்க்கலாம்.

ஆண்டுதோறும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள். உக்ரைனில் மருத்துவம் படிப்பவர்களில் இந்திய மாணவர்கள் 25 சதவிகிதம் பேர். 40க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உக்ரைனில் உள்ள நிலையில், முக்கியமான 7 கல்லூரிகளின் இந்தியர்கள் அதிகம் படிக்கின்றனர். உக்ரைன் மட்டுமின்றி, சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள்.

இந்தியாவில் நீட் தேர்வில் 7 லட்சம் முதல் 8 லட்சம் மாணவர்கள் வரை தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால், இந்தியாவில் சுமார் 90 ஆயிரம் மருத்துவ இடங்கள் மட்டுமே இருக்கின்றன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக சுமார் 20 ஆயிரம் இடங்களே கிடைக்கின்றன. எஞ்சிய லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் மருத்துவக் கனவை கைவிட முடியாமல் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை படிக்கும் முடிவை எடுக்கிறார்கள். காரணம், அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர்த்து தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் படித்துமுடிக்க, சுமார் 30 லட்சம் ரூபாய் முதல் 70 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.

இதே, சீனா, ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் பிரபலமான மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 6 ஆண்டுகள் மருத்துவம் படித்து முடிக்க, 20 முதல் 35 லட்சம் ரூபாய் செலவாகிறது. பிரபலமற்ற மருத்துவக்கல்லூரிகளில் 18 முதல் 25 லட்சத்திற்குள் ஆறாண்டு படிப்பை முடித்துவிடலாம். சீனாவிலோ 11 லட்சம் முதல் 13 லட்சம் ரூபாய்க்குள் மருத்துவம் படித்து முடித்துவிடலாம் என்பதே பல இந்திய மாணவர்கள் வெளிநாடுகளை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடித்தாலும் இந்தியாவில் மருத்துவராக உரிமம் பெற, தகுதித் தேர்வை எழுத வேண்டும். மிகக் கடினமான இந்தத் தேர்வில், தேர்ச்சி சதவிகிதம் ஆண்டுக்கு 14 % முதல் 20% வரையே இருக்கிறது. ஆயினும் வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.

2016 ஆம் ஆண்டுக்குப்பிறகு வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கவும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகி இருக்கிறது. ஆயினும் தேர்ச்சி பெற்றாலே வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க முடியும் என்பது ஒரு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

உக்ரைனில் பயிற்று மொழி ஆங்கிலம் என்பதும், இந்திய மருத்துவ படிப்பை ஒத்து இருக்கும் பாடத்திட்டமும் மாணவர்கள் அந்நாட்டை தேர்வு செய்ய காரணமாக இருக்கிறது. ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேர் உக்ரைனில் மருத்துவம் படித்து விட்டு தாய்நாடு திரும்புகிறார்கள். போர் என்ற பேரழிவு, உக்ரைனில் தற்போது மருத்துவம் படிக்கும் எண்ணற்ற மாணவர்களின் நிலையை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

இதையும் படிக்க: ”நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள்தான் வெளிநாடுகளில் படிக்கிறார்கள்” - மத்திய அமைச்சர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com