சென்னையில் 5ஆம் நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்.. தலைவர்கள் நேரில் ஆதரவு.. என்னதான் நடக்கிறது?

2013 ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 24000 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று பணி வழங்கப்பட்டது.
teachers protest
teachers protestTWITTER

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி வளாகத்தில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 5 ஆம் நாளாக சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித் துறை அலுவலக வளாகத்தில் (டிபிஐ) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்றோர் நலச் சங்கத்தினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

”2013 ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 24000 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் அப்போது தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட மேலும் 20,000 பேருக்கு பணி வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 2018 ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மீண்டும் பணி நியமன போட்டித் தேர்வில் பகுதிபெற வேண்டும் என்று விதி கொண்டுவரப்பட்டது. இதனால் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணி வழங்கப்படாமல் உள்ள நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

protest
protesttwitter

கடந்த 2013 ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வழங்கப்படாமல் உள்ள எங்களுக்கு பணி நியமன போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். எங்களுக்கு நேரடியாக பணி வழங்க வேண்டும்.

குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு பணி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பை 57 வயதாக உயர்த்த வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனை வலியுறுத்தி 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வழங்கப்படாமல் உள்ள 300 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடந்த 9 ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற எங்களுக்கு பணி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர்கள் எங்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

protest
protesttwitter

5 ஆம் நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதுமிருந்து ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். பெண் ஆசிரியைகள் குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உணவு அருந்தாமல் இருப்பதால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்றுள்ள 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக அங்கு எப்போதும் தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிரடி போராட்டம் காரணமாக அந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com