கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்க கோரிய மனு தள்ளுபடி

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்க கோரிய மனு தள்ளுபடி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்க கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மீதமுள்ள 20 மொழிகளையும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கிவரும் சூழலில், ஒட்டுமொத்தமாக 1,228 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்தப் பள்ளிகளில் அந்தந்த மாநில மொழிகள் பயிற்றுமொழிகளாகவோ, பாடமாகவோ இல்லை. அதனால் இந்தி மற்றும் சமஸ்கிருதம் தெரியாத பிற மொழிபேசும் மாணவர்களை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவது உறுதியாகிறது. இலவசக் கல்வி எனும் பெயரில் மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்குவதுபோல் தெரிகிறது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி மற்றும் ஆங்கிலம் பயிற்றுமொழியாக உள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக கேந்திரியா வித்யாலயாவில் பயிலும் ஒரு மாணவன் 16 வயதுக்குப் பின்னர் தமிழ் பேசலாம், ஆனால் அவனுக்கு தமிழ் எழுதத் தெரியாது என்ற நிலை உருவாகிறது. இதனை நோக்கமாகக் கொண்டே மத்திய அரசு செயல்படுத்தும்போல் தெரிகிறது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12,78,271 மாணவர்கள் பயிலும் சூழலில் 95% மாணவர்கள் ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் தெரியாதவர்கள். அவர்களுக்கு சமஸ்கிருத பாடத்தை கட்டாயமாக்குவதும், இந்தி மொழியில் பயிற்றுவிப்பதும் அநீதியானது. ஆகவே தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் எந்த மாநிலத்தில் இயங்குகிறதோ, அந்த மாநில மொழியை கட்டாய பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் மத்திய அரசு தரப்பில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படும் போது அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கிலேயே இந்த பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ஆகவே அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது. தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், தமிழ் ஒரு பாடமாக உள்ளது. தமிழை பாடமாக பயில விரும்பும் மாணவர்கள் அதனை தேர்வு செய்து பயிலும் வகையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. வழக்கு தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com