தேர்வெழுத மைக்ரோ பிட் எடுத்துசென்ற மாணவர்கள்.... கண்காணிப்பாளர்கள் அதிரடி சஸ்பெண்ட்

தேர்வெழுத மைக்ரோ பிட் எடுத்துசென்ற மாணவர்கள்.... கண்காணிப்பாளர்கள் அதிரடி சஸ்பெண்ட்
தேர்வெழுத மைக்ரோ பிட் எடுத்துசென்ற மாணவர்கள்.... கண்காணிப்பாளர்கள் அதிரடி சஸ்பெண்ட்

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் மாணவர்கள் நூதன முறையில் மைக்ரோ ஜெராக்ஸ் எடுத்து, அதை பிட்டாக எடுத்துச் சென்ற விவகாரத்தில் தேர்வு பணியில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தேர்வு பணியிலிருந்து இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த 5 ந் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு 16 ந் தேதி தாவரவியல், உயிரியியல், வரலாறு ஆகிய முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. பொதுத் தேர்வினை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறையின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் தேர்வில் முறைகேடான செயலில் ஈடுப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான தண்டனைகளும் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்திற்கு தேர்வு கண்காணிப்பு அலுவலராக தேர்வுத்துறை இணை இயக்குனர் பொன்.குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் 9 ந் தேதி நாமக்கல் எஸ்ஆர்வி எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்த போது, பள்ளியின் முதல்வர் வளாகத்திற்குள் உள்ளே இருப்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதேபோல் 16 ந் தேதி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆய்வுக்கு சென்றபோது ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் 11 ம் வகுப்பு தேர்விற்கு முன்னதாக மைக்ரோ ஜெராக்ஸ் போட்டு எடுத்துச்செல்வதை பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து செங்கரை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியின் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளருக்கு அறிவுரை கூறி மாணவர்களிடம் இருந்த பிட் பேப்பர்கள் அனைத்தும் தேர்விற்கு முன்னதாகவே பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஜெராக்ஸ் கடையில் இதுபோன்ற பணிகளை செய்தால் மூடுவோம் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்.

பின்னர் கடந்த 17 ந் தேதி 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்கு, விலங்கியல் தேர்வினை கண்காணிக்க சென்றப்போது நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களை ஆய்வு செய்தார். தேர்வு துவங்குவதற்கு முன்னரே மாணவர்களிடம் இருந்த பிட் பேட்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் தற்போது மாணவர்கள் தேர்வில் முறைகேடாக பிட் அடிக்க உதவியாக செயல்படும் தேர்வறை கண்காணிப்பாளர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரையும் பணியிலிருந்து விடுவித்து ஆசிரியரை நியமித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு தேர்வுத்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்து தேர்வினை நடத்தினாலும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்கள் பணியை முழுவதும் சிலர் செய்யாமல் தவறுகின்றனர் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com