வேளாண் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் இளநிலை படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் இன்று மதியம் 3 மணி முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் உள்ள கல்லூரிகளில் மொத்தமுள்ள 3 ஆயிரத்து 422 இடங்களுக்கு 65 சதவிகிதம் பல்கலையாலும், 35 சதவிகித இடங்கள் அந்தந்தக் கல்லூரிகளாலும் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று மதியம் 3 மணி முதல் தொடங்குகிறது. மாணவர்கள் www.tnau.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை இணைய தள வங்கி சேவை, கிரெடிட், டெபிட் அட்டைகள் மூலமாகவும் செலுத்தலாம். இத்தகைய வசதி இல்லாதவர்கள் ஸ்டேட் வங்கி கிளைகளில் கட்டணத்தை செலுத்தலாம். தரவரிசை பட்டியல், ஜூன் 22 ல் வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து முதல் கட்ட கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாக வருகிற ஜூலை 9-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.