பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எந்த வகுப்பிற்கு, எப்போது நடைபெறும் என்பது குறித்து முதல்வர் வரும் 10ஆம் தேதி அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, அம்மா இரு சக்கர வாகனம் வழங்குதல் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதை தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “ஆகஸ்ட் 10 ம் தேதி திங்கட்கிழமை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவர உள்ளது. அதற்கான அறிவிப்பினை பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எந்த வகுப்பிற்கு எப்போது நடைபெறும். பாடப் புத்தகம், புத்தகப்பை மற்றும் ஷு வழங்குதல் குறித்த அட்டவணையை வரும் 10ஆம் தேதி முதல்வர் அறிவிக்க உள்ளார். தேர்வு எழுதாத நேரத்தில் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்று பதினொன்றாம் வகுப்புக்கு செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.