“ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவுமுறை வாழ்க்கை முழுவதற்குமானது” - பிரதமர் மோடி

“ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவுமுறை வாழ்க்கை முழுவதற்குமானது” - பிரதமர் மோடி
“ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவுமுறை வாழ்க்கை முழுவதற்குமானது” - பிரதமர் மோடி

ஆசிரியர்கள் மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். இந்திய சைகை மொழி அகராதி (உலகளாவிய கற்றல் வடிவமைப்புக்கு ஏற்ற, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான ஒலி மற்றும் எழுத்துக்கள் அடங்கிய சைகை மொழியுடன் கூடிய காணொளி), பேசும் புத்தகங்கள் (பார்வையற்றவர்களுக்கான ஒலி நூல்கள்), சிபிஎஸ்இ-யின் பள்ளி தர உறுதி மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு, நிபுன் பாரத் மற்றும் வித்யாஞ்சலி இணைய தளத்திற்கான நிஷ்தா ஆசிரியர்கள் பயிற்சித் திட்டம் (கல்வி தன்னார்வலர்கள்/ நன்கொடையாளர்கள்/ பள்ளி மேம்பாட்டிற்கான பெருநிறுவன சமூக பொறுப்பு பங்களிப்பாளர்களுக்கு உதவுவதற்காக) உள்ளிட்ட முன்முயற்சிகளையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,  "தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுகள். ஆசிரியர்கள் மாநாட்டை முன்னிட்டு இன்று ஏராளமான புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன. விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தை நாடு கொண்டாடி வருவதால் இந்தத் திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. சுதந்திரத்தின் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா எவ்வாறு இருக்கும் என்பதற்கான புதிய தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும். நெருக்கடியான தருணத்தை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட திறன்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மாறிவரும் காலத்திற்கிடையே நாம் இருந்தபோதும், அதிர்ஷ்டவசமாக நவீன மற்றும் எதிர்காலத்திற்கு உகந்த புதிய தேசிய கல்விக்கொள்கை நம்மிடையே உள்ளது” என்றார். 

தேசிய கல்விக் கொள்கையின் வடிவமைப்பு மற்றும் அமலாக்கத்தின் ஒவ்வொரு நிலையிலும் பங்காற்றிய கல்வியாளர்கள், நிபுணர்கள் மற்றும் ஆசிரியர்களை பிரதமர் பாராட்டினார். இந்த பங்களிப்பை புதிய நிலைக்கு எடுத்துச் செல்லுமாறும், சமுதாயத்தையும் அதில் ஈடுபடுத்துமாறும் ஒவ்வொருவரையும் அவர் கேட்டுக்கொண்டார். கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் கொள்கையின் அடிப்படையிலானவை மட்டுமல்ல, பங்களிப்பின் அடிப்படையிலானவையும் கூட என்று அவர் குறிப்பிட்டார்.

‘அனைவரின் முயற்சியுடன்’, ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரும் வளர்ச்சி அடைவோம்’ என்ற நாட்டின் உறுதித்தன்மைக்கான தளமாக ‘வித்யாஞ்சலி 2.0’ விளங்குவதாக பிரதமர் கூறினார்.

மேலும் பேசிய அவர், “அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை அதிகரிப்பதற்காக தனியார் துறையினர் முன்வந்து, பங்களிக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில், மக்களின் பங்களிப்பு இந்தியாவின் தேசிய அடையாளமாக மீண்டும் மாறிவருகிறது. சமுதாயம் ஒற்றுமையாக செயல்படும்போது விரும்பத்தக்க முடிவுகள் உறுதிபடுத்தப்படும். வாழ்க்கையின் எந்த நிலையில் இருந்தாலும் இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அனைவருக்கும் பங்குண்டு. அண்மையில் நிறைவடைந்த ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் நமது தடகள வீரர்களின் செயல்திறன் போற்றத்தக்கது. 

எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் கல்வி உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல், சமமானதாகவும் இருக்க வேண்டும். தேசிய மின்னணு கட்டமைப்பு (என்-டியர்), கல்வித்துறையில் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, நவீனமயமாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கக்கூடும்.

இன்று அறிமுகப்படுத்தப்பட்ட பள்ளி தர உறுதி மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு, பாடத்திட்டம், கற்பித்தல் முறை, மதிப்பீடு, உள்கட்டமைப்பு, உள்ளடக்கிய நடைமுறைகள் மற்றும் ஆளுகை முறைகள் போன்ற பரிணாமங்களுக்கான பொதுவான அறிவியல் கட்டமைப்பில் இருந்து வந்த குறைபாட்டை நீக்கும். இந்த சமத்துவமின்மையை சரி செய்வதற்கான பாலமாக செயல்படுவதில் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்.

விரைவான மாற்றம் ஏற்பட்டு வரும் இந்த யுகத்தில், புதிய முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து நமது ஆசிரியர்களும் விரைந்து கற்றுக்கொள்ள வேண்டும். 

நமது ஆசிரியர்கள் தங்களது பணியை வெறும் தொழிலாக மட்டும் கருதுவதில்லை. அவர்களுக்கான கற்பித்தல், மனித நேயம், ஒரு புனிதமான தார்மீகக் கடமையால் குறிக்கப்படுகிறது. அதனால்தான் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே தொழில் சார்ந்த உறவுமுறை நிலைப்பதில்லை, குடும்ப உறவுமுறைதான் பின்பற்றப்படுகிறது. மேலும் இந்த உறவுமுறை, வாழ்க்கை முழுவதற்குமானது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com