இன்று தொடங்குகிறது பிளஸ் ஒன் தேர்வுகள்; காப்பி அடிப்பவர்களை பிடிக்க பறக்கும்படை..!
தமிழ்நாட்டில் பிளஸ் ஒன் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. இன்றைய தினமும் வருகிற ஆறாம் தேதியும் மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.
11-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரையில் அறிவியல், வணிகம், உயிரியல், கணிதம், உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறவிருக்கின்றன. இந்தத் தேர்வுகளை மூன்று லட்சத்து 85 ஆயிரத்து 867 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 252 மாணவிகளும் எழுதுகின்றனர்.
இவர்கள் தவிர சிறைவாசிகள் 100 பேரும் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் மே 14-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் காப்பி அடிப்பவர்களைப் பிடிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பிறரைப் பார்த்து எழுதினால் இரண்டு ஆண்டுகளுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் ஏற்கெனவே அறிவித்திருப்பது நினைவுகூறத்தக்கது.