நாட்டா தகுதி தேர்வு வழக்கில் மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு.!

நாட்டா தகுதி தேர்வு வழக்கில் மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு.!
நாட்டா தகுதி தேர்வு வழக்கில் மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு.!

நாட்டா தகுதித் தேர்வு தேவையில்லை என ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவித்த பிறகும், அந்த தகுதி அவசியம் எனக் கூறி, பி.ஆர்க். படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பி. ஆர்க். படிப்பிற்கு நாட்டா தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என ஆர்கிடெக்சர் கவுன்சில் 2008ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவிற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

தடை விதித்திருக்கும் போதிலும் பல மாநிலங்களில் நாட்டா தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என வற்புறுத்தியதால், ஆர்கிடெக்சர் கவுன்சில் 2017ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி வெளியிட்ட விளக்க சுற்றறிக்கையில், நாட்டாவை வற்புறுத்த தேவையில்லை என்றும், ஜே.இ.இ. உள்ளிட்ட தகுதி தேர்வுகளின் அடிப்படையில் பி.ஆர்க். படிப்பில் ஆள்சேர்க்கை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் 2017-18ம் கல்வியாண்டில் பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கான விளக்க குறிப்புகளில் நாட்டா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டதின் காரணமாக ஜே.இ.இ. தேர்வில் 390 மதிப்பெண்களுக்கு 226 எடுத்த அம்ருதா என்கிற மாணவி பி.ஆர்க். படிப்பிற்கு அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நாட்டா தேர்வு கட்டாயமில்லை என்ற பிறகும் மாணவியின் விண்ணப்பத்தை நிராகரித்ததால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்கக் கோரி 2017ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது .

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் இருந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுப்ரமணியன், நாட்டா தேவையில்லை என்று 2017ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், நாட்டா தகுதி தேர்வு அவசியம் என ஜூன் 25ம் தேதி மாணவர் சேர்க்கை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டது ஆர்கிடெக்சர் கவுன்சில் உத்தரவை மீறும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவிப்பு வெளியிடாவிட்டாலும் கூட, நாட்டா கட்டாயம் என்ற அறிவிப்புக்கு 2008ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும், ஜே.இ.இ. உள்ளிட்ட தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசு உத்தரவிட்டதையும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து நாட்டா தேர்வில் தகுதி பெறவில்லை என கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், ஒரு லட்ச ரூபாய் வழக்கு செலவு தொகையும் சேர்த்து 4 வாரத்தில் வழங்க உத்தரவிட்டார்.

மேலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதி, கல்வியின் கொள்கைகளை முடிவு செய்யும் பொறுப்பில் இருக்கும் பொறுப்பற்ற கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளால், நம் இளைஞர்களின் வாழ்வு எப்படி பாதுகாப்பற்றதாக உள்ளது என்பதை இந்த வழக்கு படம்பிடித்து காட்டுவதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து கல்வி என்பது வாழ்வாதாரத்திற்கு தேவையான தகுதியை வழங்குவதற்கு மட்டும் அல்ல, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதும் தான் என குறிப்பிட்ட நீதிபதி, சமீப நாட்களில் கல்வி வணிகமயமானது மட்டும் அல்லாமல், தகுதி இல்லாதவர்களின் கைகளிலும், அறிவுசார் ஆணவகாரர்களின் கைகளிலும் விழுந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார்.

மேலும் பெயருக்கு பின்னால் கல்வி தகுதியை பெற்றிருக்கும் இந்த ஆணவக்காரர்கள் எடுக்கும் முடிவுகளால், மாணவர்களின் வாழ்க்கை வீணாவதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com