திருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டும் தான் கல்லூரியில் சீட்: தெலுங்கானா அரசு
திருமணம் ஆகாத பெண்கள் மட்டும் தான் தெலுங்கானா அரசின் சமூக நலத்துறை சார்பில் இயக்கப்படும், இலவசமாக தங்கி படிக்கும் பெண்கள் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.
தெலுங்கானா அரசின் சமூக நலத்துறை சார்பில், பெண்கள் இலவசமாக தங்கி படிக்கும் வகையில் 23 கல்லூரிகள் இயக்கப்படுகின்றன. இதில் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் என அனைவரும் படித்து பட்டம் பெற்று வந்தனர்.
இந்நிலையில் இந்த வருடம் முதல், திருமணம் ஆகாத பெண்கள் மட்டும் தான் இந்த 23 கல்லூரிகளிலும் படிப்பதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெலுங்கானா அரசு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விளக்கியுள்ள தெலுங்கானா அரசு, திருமணமான பெண்கள் விடுதியில் தங்கி படிக்கும் போது, கணவன் தன் மனைவியை பார்க்க வருவதாகவும் அப்போது மற்ற பெண்களின் கவனமும் சிதறுவதாகவும் கூறியுள்ளது.
இதனிடையே தெலங்கானா அரசின் இந்த முடிவு மிகவும் பிற்போக்குத்தனமானது என்றும், இதனால் திருமணமான பெண்களின் கல்வி கனவு பொய்யாகும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். எனவே இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.