பி.இ ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம் அதிரடி
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை மற்றும் ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் வி. பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதால் மாணவர் சேர்க்கை வெளிப்படைத் தன்மையுடன் நடக்கும் என்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் சென்னைக்கு வர வேண்டிய தேவை இருக்காது என்றும் அண்ணா பல்கலைகழகம் தரப்பில் கூறப்பட்டது.
ஆங்காங்கே மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அண்ணா பல்கலைகழகம் இதனால் இரு தரப்புக்குமே நேர விரயம் தவிர்க்கப்படுவதாக கூறியது. இதனை ஏற்ற நீதிபதிகள் விண்ணப்ப கட்டணத்தை டிடியாக பெற்று கொள்ள அண்ணா பல்கலைகழகம் ஒப்புக்கொண்டதையும் சுட்டிக்காட்டினர். மேலும் உதவி மையங்களில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளது உள்ளிட்டவற்றை ஊடகங்கள் மூலம் பெருமளவில் விளம்பரப்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலைகழகத்துக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து ஜூன் 8-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைகழகத்துக்கு ஆணையிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.