சத்துணவு திட்டத்தில் தனியார்மயமா? -  ‘அட்சய பாத்திரம் அறக்கட்டளை’ ஏன்?: கேள்வி எழுப்பும் கல்வியாளர்கள்

சத்துணவு திட்டத்தில் தனியார்மயமா? - ‘அட்சய பாத்திரம் அறக்கட்டளை’ ஏன்?: கேள்வி எழுப்பும் கல்வியாளர்கள்

சத்துணவு திட்டத்தில் தனியார்மயமா? - ‘அட்சய பாத்திரம் அறக்கட்டளை’ ஏன்?: கேள்வி எழுப்பும் கல்வியாளர்கள்
Published on

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் உணவு வழங்கும் திட்டத்தின் விழாவை தமிழக அரசே முன்னின்று நடத்தியுள்ளது. ஆளுநர், அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தை அரசே எப்படி ஊக்குவிக்கலாம் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்துள்ளது.

யார் இந்த ‘அட்சய பாத்திரம் அறக்கட்டளை’?

‘அட்சய பாத்திரம் அறக்கட்டளை’ என்பது மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம். இந்த அறக்கட்டளை இந்தியா முழுவதும் 16,856 அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகளைச் சேர்ந்த 18.02 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருகிறது. இதற்காக, 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 5 கிச்சன்கள் இயங்கி வருகின்றன. இதற்கான நிதியை பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்களிடம் இருந்து இந்த அறக்கட்டளை திரட்டுகின்றது.

‘அட்சய பாத்திரம் அறக்கட்டளை’ சர்ச்சைகள்:

அட்சய பாத்திரம் அறக்கட்டளை நிறுவனம் மூலம் வெங்காயம், பூண்டு சேர்க்கப்படாத சைவ உணவு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விவகாரம் ஏற்கெனவே சர்ச்சையில் உள்ளது. சுவையில்லாத உணவு வழங்கப்படுவதாக ஒரு தரப்பினர் விமர்சனங்களை முன் வைத்தனர். மற்றொரு தரப்பினர் உயர்தரமான ஆரோக்யமான உணவுதான் வழங்கப்படுகிறது என்று ஆதரவு தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் இந்த விவகாரம் கடந்த ஆண்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. உணவின் தரம் குறித்து சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

தமிழகத்தில் அட்சய பாத்திரம் அறக்கட்டளை:

தமிழகத்திலும் அட்சய பாத்திரம் அறக்கட்டளை பல்வேறு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அளித்து வருகிறது. அட்சய பாத்திர அமைப்பும், சென்னை மாநகராட்சியும் இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில், அட்சய பாத்திர அமைப்பின் புதிய உணவுக்‌கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

அந்த வகையில், அட்சய பாத்திரம் அறக்கட்டளை அமைப்பின் உணவுக் கூடங்கள் அடிக்கல் நாட்டு விழா இன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார். இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் க‌லந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அட்சய பாத்திரம் அமைப்பின் சேவையை பாராட்டி ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி அளித்தார். இதேபோல், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழைக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதற்காக, 'அட்சய பாத்திரம்' அறக்கட்டளைக்கு தமிழக ஆளுநர் ரூ.2 கோடிக்கான காசோலையை அளித்து இருந்தார்.

ஏன் தன்னார்வ நிறுவனம் உணவு அளிக்கிறது?:

மாணவர்களின் பசிக் கொடுமையை நீக்க வேண்டும், இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர வேண்டும் என்ற நோக்கங்களின் அடிப்படையில் இந்த சேவையை செய்து வருவதாக அந்த அறக்கட்டளையின் இணையத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் மாணவர்களின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில், ஒரு தனியார் ஏன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அனைவருக்குமான கல்வி திட்டம் மூலம் மாணவர்களின் இடைநிற்றலை சரி செய்ய கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசே பொறுப்பேற்க வேண்டும்:

இதுகுறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு கொடுப்பதை தவறு என்று சொல்ல முடியாது. காலை வேளையில் மாணவர்கள் பட்டினியுடன் வருகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அரசுப் பள்ளிகளில் உள்ள சத்துணவு ஊழியர்கள் மூலமே இதனை சமைத்துக் கொடுக்க வேண்டும். வெளியில் இருந்து உணவு சமைத்துக் கொண்டு வருவது சரியாக இருக்காது. ஏற்கெனவே கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த அறக்கட்டளை செய்து வந்தது. தற்போது தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தி வருகிறது. படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்காமல், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசே மொத்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவரை மாணவர்கள் உண்ணும் உணவினை முறையாக பரிசோதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com