ஆன்லைன் வகுப்புகள் அல்ல; டிவி மூலமாகவே பாடம் : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்போவதாக தகவல் வெளியான நிலையில, டிவி மூலமாகவே பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள கிராமங்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் சார்பில் கல்வியாளர்கள் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொண்டு அதற்கு தேவையான பணிகள் நடைபெறும்.
முதலில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடவடிக்கைகள் எடுத்த பிறகு கருத்துகள் கூறினால் நன்றாக இருக்கும். முன்னதாகவே கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளன.
6,010 பள்ளிகளில் கணிணி வழங்கி கணினி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி மூலமாகத் தான் தற்போது பாடத்திட்டங்களை கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால் மட்டுமே தேர்ச்சி அடைவார்கள். 12-ஆம் வகுப்பு எஞ்சிய தேர்வை எழுதாத மாணவர்களை எப்படி தேர்ச்சி அடைய செய்ய முடியும்? தேர்வு நடத்த அரசு தயார் நிலையில் உள்ளது. தேர்வு நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன. தேர்வு எழுத விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை தயாராக உள்ளது. அந்தந்த பள்ளிகளில் ஹால்டிக்கெட் வழங்கப்படும். கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தற்போது தேர்வு எழுத உள்ளனர். தமிழக முதல்வர் மாணவர், பெற்றோர்களின் நலன் கருதி தமிழகத்தில் மட்டும்தான் அனைவருக்கும் ஆல்பாஸ் என்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மட்டும் தான் நீட் பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் நிலைப்பாடும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதுதான்” எனத் தெரிவித்தார்.