புதுச்சேரி ஜிப்மரில் உள்ள எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் 133 மையங்களில் நடைபெற்றது.
மத்திய அரசு கல்வி நிறுவனமான ஜிப்மரில் எம்டி., எம்எஸ், எம்டிஎஸ், பிடிஎஸ் மற்றும் பிடிசிசி படிப்புக்களுக்கான ஆன்லைன் நுழைவு தேர்வு இன்று நடைபெற்றது. எம்டி, எம்எஸ் படிப்பில் 125 இடங்களும், எம்டிஎஸ் படிப்பில் 2 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 10 இடங்களும், பிடிசிசி படிப்பில் 12 இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் ஆன்லைன் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இந்தியா முழுவதும் 105 நகரங்களில் 133 தேர்வு மையங்களில் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. புதுச்சேரியில் 5 மையங்களிலும் இந்த தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை எழுத 16 ஆயிரத்து 357 பேர் விண்ணப்பித்த நிலையில் எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் படிப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், பிடிஎஸ், பிடிசிசி படிப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 11 மணி வரையும் தேர்வு நடைபெற்றது.
கொரோனா தொற்று நோயைக் கருத்தில் கொண்டு தேர்வைப் பாதுகாப்பாக நடத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்த பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.