நீட் தேர்வு ஆன்லைன் முறை வாபஸ் - தேசிய தேர்வு முகமை
நீட் தேர்வை ஆன்லைனில் நடத்தும் அறிவிப்பை வாபஸ் பெறுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேசிய தேர்வு முறை அறிவிப்பில், கடந்த முறை எத்தனை மொழிகளில் தேர்வு நடைபெற்றதோ, அதே அளவு மொழிகளில் இந்தமுறை நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிப்ரவரி மற்றும் மே என இரு காலகட்டங்களில் நீட் தேர்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டதை ரத்து செய்து, மே மாதத்தில் ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று, இந்தாண்டு இந்த அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தவிர, நெட், ஜெஇஇ மெயின் 1, மெயின் 2 போன்ற அனைத்து தேர்வுகளும் கணினி மூலம் மட்டுமே நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. கணினி வழித் தேர்வுக்கு ஊரகப் பகுதி மாணவர்கள் தயாராவதற்கு வசதியாக, நாடு முழுவதும் 2,697 பள்ளி கல்லூரிகளில் கணினி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டணம் ஏதுமின்றி மாணவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.