நீட் தேர்வுக்கு நீடிக்கும் சிக்கல்: என்னவாகும் மாணவர்களின் நிலை?

நீட் தேர்வுக்கு நீடிக்கும் சிக்கல்: என்னவாகும் மாணவர்களின் நிலை?
நீட் தேர்வுக்கு நீடிக்கும் சிக்கல்: என்னவாகும் மாணவர்களின் நிலை?

நீட் தேர்வுக்கு இடைக்கால தடை விதித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, தற்போது இந்தி, குஜராத்தி, மராத்தி மொழிகளில் கொடுக்கப்பட்ட வினாத்தாள்களை அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களை வைத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுக்க உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் நீட் தேர்வையும், தேர்வு நடந்தவிதத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆளும் கட்சியான அதிமுகவும் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி வருகிறது. ஆனால் நீட் தேர்வில் விலக்கு அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் புதுக்கோட்டை மாணவி ஜெரோபோ கிளாட்வின் தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வை முற்று முழுதாக ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்தி, குஜராத்தி, மராத்தி மொழிகளில் வெளியான நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் எளிமையாக இருந்தது எனவும் இது நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பொதுவான தேர்வாக நடைபெறவில்லை எனவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். எனவே 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மருத்துவக் கல்விக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏற்கெனவே நீட் தேர்வு தொடர்பாக இரண்டு வழக்குகள் இருப்பதால் இவ்வழக்கையும் சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்கலாம் என்று கூறினார். ஆனால் மனுதாரர் தரப்பில், இப்பிரச்னையில் காலம் நீட்டித்துக் கொண்டே செல்வதால் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரினார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்தி, குஜராத்தி, மராத்தி மொழிகளில் கொடுக்கப்பட்ட வினாத்தாள்களை அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களை வைத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஜூன் 12 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மனுதாரருக்கு உத்தரவிட்டார்.

நீட் தேர்வு அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான பொதுத்தேர்வாக நடைபெறவில்லை என்று ஏற்கெனவே திருச்சியை சேர்ந்த சக்தி மலர்க்கொடி என்ற மாணவியும், மதுரை ஜொனிலா உள்ளிட்ட 9 மாணவிகளும் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் மற்றும் சி.பி.எஸ்.இ. செயலர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த வழக்குகளும் வரும் ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடரும் சிக்கல்களால் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான காலம் நீடித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மருத்துவக் கல்வியில் சேர முடியுமா? முடியாதா? என்ற குழப்பம் மாணவர்களிடையே அதிகரித்து கவலையான சூழல் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com