மாணவர் சேர்க்கையே நடைபெறாமல் டிவியில் பிளஸ் ஒன் பாடங்கள்... ஆசிரியர்கள் கவலை
(கோப்பு புகைப்படம்)
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பதினோராம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறாத நிலையில், கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பாகி வருவது கவலையளிப்பதாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஜூலை 15 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையில் ஒளிபரப்பாகும், பள்ளி மாணவர்களுக்கான பாடங்களின் காணொளி விவரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிளஸ் ஒன் மாணவர்களுக்கான பாடங்களும் இடம்பெற்றுள்ளன.
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா காரணமாக வேலைவாய்ப்பை இழந்துள்ள பெற்றோர்கள், குறைந்த செலவில் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நினைக்கின்றனர். பிளஸ் ஒன் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறாத நிலையில் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.
சில நாட்களாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் உள்ள ஹைடெக் லேப் வழியாக பிளஸ் டூ பாடப் புத்தகங்களை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் என்று பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. பல பள்ளிகளில் ஹைடெக் லேப்கள் செயல்படவில்லை. மேலும், மாணவர்களுக்கு சரியான இணைய வசதி இல்லை என்பதால், ஆசிரியர்களே பென்ட்ரைவ் மூலம் பாடப்புத்தகங்களை அனுப்பிவருகிறார்கள்.
தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பாகும் நிலையில், பதினோராம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கவேண்டும் என்பது பெற்றோர்கள் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வேண்டுகோளாக உள்ளது.