ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் சேர தேசிய அளவில் நடத்தப்பட்ட ஜெஇஇ முதன்மைத் தேர்வில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
நாட்டிலேயே சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களாக கருதப்படும் ஐஐடி, என்ஐடி-யில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில ஜெஇஇ என்ற தேசிய அளவில் நடத்தப்பட்ட தேர்வில் தகுதி பெற வேண்டும். இந்தியாவில் உள்ள என்.ஐ.டி, ஐஐடி போன்றவைகளில் இளநிலை பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஜெஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியானது. இந்தாண்டு என்.ஐ.டி, ஐஐடி போன்றவைகளில் சேருவதற்கான ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 319 மாணவர்கள் ஜெஇஇ மெயின் தேர்வு எழுதிய நிலையில், 38 ஆயிரத்து 705 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 5 ஆயிரத்து 356 மாணவிகள் ஆவர்.
இந்நிலையில் ஜெஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகளில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டு குறைந்து உள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.