கல்லூரி மாணவர்களுக்கு '2ஜிபி இலவச டேட்டா' திட்டம் செயல்படுத்தப்படுவது எப்படி?

கல்லூரி மாணவர்களுக்கு '2ஜிபி இலவச டேட்டா' திட்டம் செயல்படுத்தப்படுவது எப்படி?
கல்லூரி மாணவர்களுக்கு '2ஜிபி இலவச டேட்டா' திட்டம் செயல்படுத்தப்படுவது எப்படி?

கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை 2ஜிபி இலவச டேட்டா வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் எப்படி செயல்படுத்தப்பட உள்ளது, யார் யார் பயனடைய முடியும் என்பதைப் பார்க்கலாம்.

கோவிட் தொற்றின் காரணமாக தமிழகத்தில் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணைய வழியிலேயே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் சமமான சூழலை உருவாக்கும் நோக்கில், ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை தமிழக அரசின் சார்பில் 2ஜிபி டேட்டா வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள் 2ஜிபி டேட்டாவை பயன்படுத்த ஏதுவாக DATA CARD எனும் தரவு அட்டைகள் வழங்கப்படும் என்றும், இந்த தரவு அட்டைகள் எல்காட் நிறுவனம் மூலம் விநியோகிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு இந்த தரவு அட்டைகள் வழங்கப்பட உள்ளன.



நாள் ஒன்றுக்கு இரண்டு ஜிபி டேட்டா வழங்குவதற்கான விலையை நிர்ணயிப்பது தொடர்பாக, முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், பி.எஸ்.என்.எல், வோடாஃபோன் - ஐடியா போன்றவற்றுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது.

கல்லூரி மாணவர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ள ஏதுவாக பிரத்யேக இணையதளம் ஒன்றும் உருவாக்கப்படுகிறது. அந்த இணையதளத்தில் மாணவர்கள் தங்களது தொலைபேசி எண், ஆதார் எண், கல்லூரி அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு போன்ற விபரங்களை பதிவு செய்து கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளன.



மாணவர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ள விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டவுடன், அரசிடமிருந்து மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும்.

அத்தனை மாணவர்களுக்கும் சேர்த்து, 6 மாதங்களுக்கு இத்திட்டத்துக்கான மொத்த செலவு 80ல் இருந்து 100 கோடி ரூபாய் என திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா பேக்கை அரசு வழங்குவது இதுவே முதல்முறை. பெருந்தொற்று காலத்தில் இணையவழி வகுப்புகள் மூலம் கல்வி கற்றிட அரசால் வழங்கப்படும் விலையில்லா தரவு அட்டைகளை, மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்ப்பார்ப்பு. விரிவாக வீடியோவில்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com