மருத்துவ இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாத அரசுப்பள்ளி மாணவர்கள்: நீதிபதிகள் வேதனை

மருத்துவ இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாத அரசுப்பள்ளி மாணவர்கள்: நீதிபதிகள் வேதனை
மருத்துவ இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாத அரசுப்பள்ளி மாணவர்கள்: நீதிபதிகள் வேதனை

ஏழ்மை நிலை காரணமாக அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், பல வலிகளுக்குப் பிறகு  மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், மீண்டும் பொருளாதார சூழலால் கட்டணம் செலுத்த இயலாமல் பாதியிலேயே படிப்பை கைவிடுவது வேதனை மிகுந்தது  என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. இருந்தாலும்  கட்டணம் செலுத்த இயலாமல், ஏழை அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சினிமா நடிகர்கள், மூத்த வழக்கறிஞர்கள், பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஏழை மருத்துவ மாணவர் ஒருவரை தத்தெடுத்து, அவர்களின் கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும்  என்றும்  நீதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல்லையைச் சேர்ந்த கிரஹாம்பெல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மருத்துவ கல்வி கட்டண நிர்ணய குழு, தனியார் மருத்துவக் கல்லூரிக்கான கல்வி கட்டணங்களை குறைக்காமல், சென்ற ஆண்டின் கட்டணத்தையே நிர்ணயித்தும், சில வகை மருத்துவ கல்வி கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியும் நிர்ணயித்துள்ளது. இட ஒதுக்கீட்டில் சென்றாலும், ஆண்டிற்கு 4 லட்சம் வீதம் 20 லட்ச ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது.

தமிழக மாணவர்களில் 40% மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயின்றவர்கள், நீட் தேர்வினால் சென்ற ஆண்டு அவர்களில் 6 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த வருடம் தமிழக அரசு 7.5% மருத்துவ கல்லூரி இடங்களை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் பலருக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ இடம் கிடைத்துள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த இயலாமலேயே, அரசுப்பள்ளியில் பயின்ற இந்த மாணவர்களின் பெற்றோரால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அதிகப்படியான கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளது.

இதனால் இடம் கிடைத்தும், ஏழை மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியில் கைவிடும் சூழ்நிலை உருவாகும். எனவே ஏழை அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடரும் விதமாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய கல்வி  கட்டண நிர்ணயத்தை ரத்து செய்தும், குறைவாக நிர்ணயிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு “மூத்த வழக்கறிஞர் ஒருவர் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த அரசுப்பள்ளி மாணவரின் கட்டணத்தை ஏற்றுள்ளார். இதுவரை 86 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. ஏழ்மை நிலை காரணமாக அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், பல வலிகளுக்குப் பிறகு, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், மீண்டும் பொருளாதார சூழலால் கட்டணம் செலுத்த இயலாமல், பாதியிலேயே படிப்பை கைவிடுவது வேதனை மிகுந்தது. இது முறைப்படுத்தப்பட வேண்டும்.

அரசு உன்னத நோக்கத்துடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. ஆனால் கட்டணம் செலுத்த இயலாமல், அவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சினிமா நடிகர்கள், மூத்த வழக்கறிஞர்கள், பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஏழை மருத்துவ மாணவர் ஒருவரை தத்தெடுத்து, அவர்களின் கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும் என  கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து இது குறித்து, சுயநிதி கல்லூரிகளின் கட்டண நிர்ணயக்குழு, சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவக்கல்வி இயக்குநர், செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com