பள்ளிகள் திறப்பின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !
பள்ளிகள் திறப்பின்போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்களில் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அன்லாக் 5.0-இன் கீழ், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர இதர பகுதிகளில் மேலும் சில நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பள்ளி, பயிற்சி நிறுவனங்களை பகுதி வாரியாக திறப்பது குறித்து அக்டோபர் 15-ஆம் தேதிக்கு மேல் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
1) பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் முழுமையாக சுத்தம் செய்வதற்கும் கிருமி நீக்கம் செய்வதற்கும் ஏற்பாடு செய்து உட்புற இடத்தில் காற்று ஓட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.
2) பள்ளிகள் அவசர சிகிச்சை, பொது ஆதரவு, சுகாதார ஆய்வுக் குழு போன்ற பணிக்குழுக்களை உருவாக்க வேண்டும். பள்ளிகள் தங்களுக்கு ஏற்றவாறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம்.
3) இருக்கை திட்டத்தைத் திட்டமிடும்போதும், நுழைவு மற்றும் வெளியேறும் நேரங்களின் போதும் சரிவர இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.
4) வகுப்புகளின்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
5) முழுநேர பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர் / செவிலியர் / மருத்துவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
6) மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இருந்து அவர்களது உடல்நலன் குறித்து தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
7) மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இருவருக்கும் ஏற்ற வகையில் நெகிழ்வான வருகை மற்றும் மருத்துவ விடுப்பு கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். வருகை விதிமுறைகளில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும்.
8) மதிய உணவு வழங்கும் நடவடிக்கைகளில் முன்னெச்சரிக்கை தேவை.
9) பெற்றோர்களின் ஒப்புதலை பெற்று அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்களை பள்ளிகளுக்குள் அனுமதி வேண்டும்.
10) தனிமனித இடைவெளி, ஆரோக்கியம், உடல்நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பின்பற்றி அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றவாறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து வெளியிடலாம்.
11) பள்ளிகளை அக்டோபர் 15-ம் தேதி திறக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. ஆன்லைன் வகுப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட 2-3 வாரங்கள் வரை மதிப்பீடு செய்யப்படமாட்டது.