கல்வி
புதுச்சேரி: மருத்துவக் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
புதுச்சேரி: மருத்துவக் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
புதுச்சேரியில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளான வெங்கடேஸ்வரா, மணக்குள விநாயகர், பிம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக புதுவை மாநில மாணவர்களுக்கு, 27 சதவீதம் மட்டுமே ஒதுக்குவதாகவும், 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, புதுவை மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வரை சென்டாக் கலந்தாய்வை நடத்தக்கூடாது என்று இடைக்கால தடை விதித்த நீதிபதி, இந்த வழக்கில் டிசம்பர் 9ம் தேதி இறுதிதீர்ப்பு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.