பாரத ஸ்டேட் வங்கியில் 2000 பேருக்கு அதிகாரி வேலை: விண்ணப்பிக்க ரெடியா?

பாரத ஸ்டேட் வங்கியில் 2000 பேருக்கு அதிகாரி வேலை: விண்ணப்பிக்க ரெடியா?
பாரத ஸ்டேட் வங்கியில் 2000 பேருக்கு அதிகாரி வேலை: விண்ணப்பிக்க ரெடியா?

பாரத ஸ்டேட் வங்கியில் 2000 புரபேஷனரி அதிகாரி பணி இடங்களில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. 


நாட்டில் உள்ள அரசுத்துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கி பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கியில் 2000 புரபேஷனரி அதிகாரி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 300 இடங்களும், பழங்குடியினருக்கு 150 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 540 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 1010 இடங்களும் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தற்போது, கல்லூரியில் கடைசி வருடம் படித்துவரும் மாணவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அதாவது 2-4-1988-க்கு முன்னதாகவோ அல்லது 1-4-1997க்கு பிறகோ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இதேபோல முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு.

எப்படி தேர்வு செய்கிறார்கள்?

முதல்கட்டமாக, Preliminary தேர்வு இருக்கும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தகட்ட மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அப்ஜெக்ட்டிவ் முறையில் Preliminary தேர்வு ஆன்லைனில் நடைபெறும். Preliminary தேர்வுக்கு 100 மதிப்பெண்கள். இதில், இங்கிலீஷ் லாங்க்வேஜ் பிரிவுக்கு 30 மதிப்பெண்களும், ஆப்டிட்யூட் பிரிவுக்கு 35 மதிப்பெண்களும், ரீசனிங் எபிலிட்டி பிரிவுக்கு 35 மதிப்பெண்களும் உள்ளன. தேர்வுக்கு ஒரு மணி நேரம் வழங்கப்படும்.  இத்தேர்வு ஜூலை 1, 7, 8 தேதிகளில் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களை, அடுத்தகட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 

மெயின் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் தேர்வு மற்றும் விரிவாக விடை எழுதும் தேர்வு (Descriptive) என இரண்டு பிரிவுகளின் கீழ் தேர்வுகள் இருக்கும். அப்ஜெக்ட்டிவ் தேர்வுக்கு 200 மதிப்பெண்களும், Descriptive தேர்வுக்கு 50 மதிப்பெண்களும் உள்ளன.  அப்ஜெக்ட்டிவ் தேர்வில் இங்கிலீஷ் லாங்க்வேஜ் (கிராமர், வெகாபுலரி, காம்ப்ரிஹென்சன்), ஜெனரல்/ பேங்கிங் அவேர்னெஸ், டேட்டா அனாலிசிஸ் அண்ட் இன்டர்பிரட்டேஷன், ரீசனிங் & ஆப்டிட்யூட் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வு ஆன்லைனில் நடைபெறும். இந்தத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள், விடையளிக்க மொத்தம் மூன்று மணி நேரம் வழங்கப்படும். இத்தேர்வு ஆகஸ்ட் 4 அன்று நடைபெறும்.

விரிவாக விடை எழுதும் தேர்வுக்கு (டிஸ்கிரிப்டிவ் டெஸ்ட்) 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வில் ஆங்கில மொழியில் காம்ப்ரிஹென்சன், பிரிசிஸ், லெட்டர் ரைட்டிங் மற்றும் கட்டுரை எழுதுதல் ஆகியவை இருக்கும். இத்தேர்வுக்கு விடையளிக்க அறை மணி நேரம் வழங்கப்படும்.

இந்த இரண்டு தேர்வுகளிலும் தகுதி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக குரூப் டிஸ்கஷன் மற்றும் இன்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். குரூப் டிஸ்கஷன் பிரிவுக்கு 20 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வுக்கு 30 மதிப்பெண்களும் உள்ளன. ஆன்லைன் தேர்வில் 75க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடப்படும். அத்துடன், குரூப் டிஸ்கஷனிலும் இண்டர்வியூவிலும் பெற்ற மதிப்பெண்கள் 25-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடப்படும். அதிலிருந்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கி புரபேஷனரி அதிகாரிகள் பணிக்குத் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த எழுத்துத் தேர்வை எழுதலாம். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் இத்தேர்வை எழுதலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

பொதுப் பிரிவினருக்கும், மற்றவர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.600. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100. பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கு பதிவு செய்ய வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன. இந்த வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கும். இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு அவர்களின் தகுதியின் அடிப்படையில் அடுத்த நிலையில் பணிக்கு உயர்த்தப்படுவார்கள். பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. 

தேர்வுக்கு முன் பயிற்சி:

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினருக்கு பாரத ஸ்டேட் வங்கி மூலம் தேர்வுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் இத்தேர்வுப் பயிற்சி நடைபெறலாம். ஜூன் 18 லிருந்து 23 வரை இப்பயிற்சி நடைபெறும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  கடைசி தேதி: 13.5.2018

ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 13.5.2018

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com