பல்கலைக்கழகங்களில் இறுதி பருவத்தேர்வு எப்போது? முக்கிய அறிவிப்பு
பல்கலைக்கழகங்களில் இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 15க்கு பிறகு நடக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணாக்கர்களின் இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 15 க்கு பிறகு நடத்தப்பட உள்ளது.
இதற்கான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும். மாணாக்கர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக தயார் செய்யப்பட்டு வருகிறது. பி.ஆர்க் எனப்படும் கட்டிட அமைப்பியல் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு செப்டம்பர் 7ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவினை மேற்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.