‘லவ் என்ன படிக்க விடல சார்’ 12ஆம் வகுப்பு தேர்வில் எழுதிய மாணவர் !
காதலிப்பதால் பொதுத் தேர்வுக்கு படிக்க முடியவில்லை என 12ஆம் வகுப்பு மாணவர் ஒரு விடைத்தாளில் எழுதி வைத்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
பள்ளிப் பருவத்தின் போது பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறமாட்டோம் என்ற நம்பிக்கையில், பல மாணவர்கள் விடைத்தாள்களில் ரூபாய் ஒட்டி அனுப்பும் கதைகள் பல நாம் கேட்டிறிருப்போம். அதுமட்டுமின்றி குடும்ப சூழ்நிலை, வாழ்க்கையை காப்பாற்றுங்கள் போன்ற சோகக்கதைகளையும் பல எழுதி வைத்திருந்ததாகவும் நம் காதுகளுக்கு வந்திருக்கும். ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 1.46 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக முஸாப்பர்நகர் பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர் முனேஷ் குமார் சில தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார். அதன்படி ஒரு மாணவரின் விடைத்தாளில், “காதல் என்பது இனம்புரியாத உணர்வு. அது உங்கள வாழவும் விடாது. சாகவும் விடாது. சார், இந்த காதல் கதை என்னை தேர்வுக்கு படிக்கவிடவில்லை. தேர்வு மட்டுமின்றி எதையுமே என்னால் செய்யமுடியவில்லை.” என்று கூறியுள்ளார். அத்துடன் விடைத்தாளில், ஒரு மாணவியின் பெயரை குறிப்பிட்டு, காதலிப்பதாகவும் எழுதியுள்ளார்.
மற்றோரு மாணவர் தனது விடைத்தாளில், “எனக்கு அம்மா இல்லை. நீங்கள் என்னை தேர்ச்சி பெற செய்யவில்லை என்றால் எனது அப்பா என்னைக் கொன்றுவிடுவார்.” என்று எழுதியுள்ளார். வேறொருவர் என்னை தேர்ச்சி பெற செய்யவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என விடைத்தாளில் எழுதியுள்ளதாக முனேஷ் தெரிவித்துள்ளார்.