செய்தியாளர்: கு.விவேக்ராஜ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் அய்யாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (24). இவர் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி இரவு நேர பணிக்காக சென்ற அவர், கடைக்கு வரவில்லை என வீட்டிற்கு தகவல் வந்துள்ளது. பின்னர் மறுநாள் காலை வரை கோகுல் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில் போலீசார் கோகுலை தேடிவந்தனர். அப்போது கோகுல் கடைசியாக பேசிய அவரது நண்பர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் கோகுலை கொலை செய்து எரித்து புதைள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கொலை செய்து எரித்த இடத்தை அடையாளம் காட்ட வைத்து, அந்த இடத்தில் தோண்டி உடலை எடுத்துள்ளனர். மேலும் புகார் அளித்த பெற்றோரை வரவழைத்து உடலை அடையாளம் காட்டி உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் கொலை செய்து புதைத்த இடத்தை பார்க்க தங்களை அனுமதிக்கவில்லை எனக் கூறி கோகுல் உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.