ஆண் நண்பர்களுடன் வந்த முன்னாள் காதலி.. காட்டேஜில் காத்திருந்த இளைஞர் மர்ம மரணம்!

ஆண் நண்பர்களுடன் வந்த முன்னாள் காதலி.. காட்டேஜில் காத்திருந்த இளைஞர் மர்ம மரணம்!
ஆண் நண்பர்களுடன் வந்த முன்னாள் காதலி.. காட்டேஜில் காத்திருந்த இளைஞர் மர்ம மரணம்!

கொடைக்கானலில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை, கொலை வழக்காகப் பதிவு செய்தால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம் என்று இளைஞரின் தந்தை தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மகன் சூர்யா (வயது 30) வீடியோ எடிட்டிங் படித்துள்ளார். இவர், சென்னையில் 2021 -ம் ஆண்டு தங்கி பணிபுரிந்த காலகட்டத்தில் கர்லின் ஸ்வேதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில் அதுவே காதலாக மாறியதாக தெரிகிறது. இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் வந்த சூர்யா, கொடைக்கானல் லாய்ஸ்ரோடு பகுதியில் மனோலிகுடி என்ற தனியாருக்கு சொந்தமான காட்டேஜில் வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். சூர்யா தங்கி இருந்த காட்டேஜுக்கு நேற்று முன்னாள் காதலி கர்லின் ஸ்வேதா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் கெளதம், சுபாஷ், அகில், சோனா ஆகியோர் சென்றதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா கீழே விழுந்து விட்டதாகக் கூறி கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு ஸ்வேதா மற்றும் அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சூர்யா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து கொடைக்கானல் போலீசார், சூர்யாவின் மரணம், சந்தேக மரணம் என வழக்காக பதிவு செய்தனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சூர்யாவின் தலை மற்றும் உடம்பில் ரத்த காயம் இருப்பதாகவும், சூர்யாவை அவரது முன்னாள் காதலி கர்லின் ஸ்வேதா தனது ஆண் நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து கொலை செய்து உள்ளனர் என்றும், ஆகவே இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்ய வேண்டும் என்றும், அப்பொழுதுதான் சூர்யாவின் உடலை பெற்றுக் கொள்வோம் என அவரது தந்தை அய்யாதுரை மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். 

இது தொடர்பாக போலீசார் சூர்யாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com