குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை வெட்டி படுகொலை செய்தவர்களை 2 மணிநேரத்தில் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், போலீஸ் லைன் தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாயில் இளைஞர் ஒருவர் விழுந்து கிடப்பதாக நகர காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் கால்வாயில் விழுந்து கிடந்த நபரை மீட்டு சடலத்தை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்து கிடந்தது அதே பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (38) என்பது தெரியவந்தது. சென்னையில் பேட்டரி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், காவல்துறையினர் விசாரணையை துவங்கிய 2 மணி நேரத்தில் கொலைக் குற்றவாளிகளான ஷாலேஷா (23), கமலேஷ் (25) ஆகிய இருவரையும், நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் உயிரிழந்த ஜாகீர் உசேன், நேற்றிரவு குற்றவாளிகள் இரண்டு பேருடன் இணைந்து மது அருந்தியுள்ளார். அப்போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் சேர்ந்து ஜாகிர் உசேனை வெட்டிக் கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.