சத்தீஸ்கரில் ஆசைக்கு இணங்க மறுத்த நண்பனின் தாயை அடித்துக் கொலைசெய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் மகசாமுந்த் மாவட்டத்திலுள்ள பாஸ்னா காவல்நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் சிந்தாமணி படேல் என்கிற சிந்து. 20 வயதான சிந்து புதன்கிழமை இரவு தனது கிராமத்திலுள்ள நண்பரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்போது சிந்துவுடைய நண்பனின் 42 வயதான தாய், அவர் வீட்டில் இல்லை என்று கூறியிருக்கிறார். வயலிலிருக்கும் அறுவடை இயந்திரத்தை பார்க்க அழைத்திருந்ததாக கூறியிருக்கிறார். வீட்டிற்கு அருகிலேயே வயல் இருந்ததால் அந்த பெண் சிந்துவை அழைத்துச் சென்றிருக்கிறார்.
அங்கிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்கவே, ஊர்மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கின்றனர். அங்கு தரையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த பெண்ணை பார்த்த ஊரார் அதிர்ச்சியடைந்தனர். சுயநினைவை இழப்பதற்கு முன்பே அந்த பெண், சிந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு மறுத்ததால் அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறியிருக்கிறார். ஊரார் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றிருக்கின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் வியாழக்கிழமை உயிரிழந்துவிட்டார். தப்பிச்சென்ற சிந்துவை போலீஸார் தேடி கைதுசெய்துள்ளனர்.