வடமாநில இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கிண்டி மடுவின்கரை செங்கேணியம்மன் கோயில் தெருவில் தர்மேந்திர் என்பவர், பாலாஜி சாட் கார்னர் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு சரக்கு மாஸ்டர் தேவை பட்டதால் பீகாரைச் சேர்ந்த பான்குமார் என்பவரை கடந்த 27ஆம் தேதி வேலைக்கு சேர்த்ததோடு அவரை கடைக்கு மேல் இருக்கும் அறையில் தங்க வைத்திருக்கிறார்.
இந்நிலையில் ஏற்கெனவே அந்த அறையில் பெயிண்டர் வேலை செய்யும் வடமாநில இளைஞர்கள் சிலரும் தங்கியிருந்தனர். இதையடுத்து அனைவரும் ஒன்றாக தங்கியிருந்த நிலையில், சிலரது செல்போன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த இளைஞருக்கும் அங்கு தங்கியிருந்தவர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவம் நடந்த அன்று மதியம் மாஸ்டர் வேலைக்கு வந்தவர் உயிரிழந்ததாக தர்மேந்திர் கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வடமாநில இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ராகேஷ் என்பவரின் செல்போன் காணாமல் போனதால் பான்குமாரை அடித்துள்ளனர். அவர் குடிபோதையில் இருந்ததால் மயக்கத்தில் அப்படியே இறந்துள்ளார். பிரேத பரிசோதனையில் மருத்துவர்கள் அடித்துக் கொலை செய்திருப்பதாக கூறியதன் பேரில் வடமாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திர் (24), மற்றும் ஜித்தேந்தர் (21) ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.