திருமண ஆசைகாட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் போக்சோவில் கைது
திருத்தணியை அடுத்துள்ள வி.கே.என்.கண்டிகையில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோவில் கைது செய்யப்பட்ட இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்துள்ள வி.கே.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். வயது 24. இவருக்கு திருமணமாகி ஐந்து வயதில் குழந்தை உள்ள நிலையில், மனைவியை பிரிந்து இவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், மகளின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் மாணவியை, அவரது தாயார் விசாரித்தபோது வெங்கடேசன் என்ற இளைஞர் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொந்தரவு செய்வதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார்.
மாணவியின் புகாரையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சத்தியவாணி தலைமையிலான காவல்துறையினர் வெங்கடேசனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து திருத்தணி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.