வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது
வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

காது கேளாத வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை மந்தைவெளி விசி தோட்டம் பகுதியைச் சேர்ந்த வாய்பேச இயலாத காது கேளாத இளம்பெண் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது தோழி மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு அடையாறு காந்தி நகரைச் சேர்ந்த வாய்பேச முடியாத, காதுகேளாத அருண்கிஷோர் (32) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இதையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், இவர்களது நட்பு காதலாக மாறியது. இதனையடுத்து அருண்கிஷோர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுக சிறுக 3 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 2019 நவம்பர் மாதம் அந்த பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த அருண் அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றுள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அருணகிஷோருடனான காதலை முறித்து கொண்டதுடன் அவருடனான தொடர்பை தவிர்த்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அருண், காதலி வேலைக்குச் செல்லும்போது பின் தொடர்ந்து வந்து அவருக்கு தொல்லை கொடுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் இது குறித்து மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அருண்கிஷோர் இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மயிலாப்பூர் போலீசார் அருண் கிஷோர் மீது 376- பாலியல் பலாத்காரம், 506(2)- கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

விசாரணைக்குப் பிறகு சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் அருண் கிஷோரை ஆஜர்படுத்திய போலீசார், சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com