திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழிக்கு பழியாக வெட்டி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி பொன்னேரி புரத்தைச் சேர்ந்தவர் குழந்தை. இவரது மகன் பெலிக்ஸ் ஜான்சன் (வயது 28). நேற்றிரவு ஆட்டோவில் மாவடிகுளம் அருகே சென்ற பொழுது மர்ம நபர்கள் ஜான்சனை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ஜான்சனின் முகம் சிதைந்து போனதோடு கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் பெலிக்ஸ் ஜான்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்த தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் நடத்திய விசாரனையில், கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சி பொன்மலை பட்டி கடைவீதியில் சின்ராஜ் என்பவரை வெட்டி கொலை சொந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி அலெக்ஸின் தம்பிதான் இந்த பெலிக்ஸ் ஜான்சன் என்பது தெரிய வந்துள்ளது.
சின்ராஜ் கொலை செய்யப்பட்டபோது, அவரது நண்பர்கள் இரங்கல் போஸ்டரொன்றில் ‘விரைவில்’ என்று அச்சிட்டு போஸ்டர் அடித்திருந்தனர். இந்த ‘விரைவில்’ என்ற வார்த்தைக்கு பின்னணியில், ரவுடி அலெக்ஸூக்கு கொலை மிரட்டல் இருப்பதாக சர்ச்சை எழுந்திருந்தது. இந்த ‘விரைவில்’ போஸ்டர் சம்பந்தமாக அப்போதே பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து சில பேரை கைது செய்தனர். அவர்களும் தற்போது விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர்.
மேலும் திருச்சி எஸ்.பி சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு விசாரணை செய்துள்ளார். திருச்சியில் பழிக்கு பழியாக கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருவதாகக்கூறி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தொடர்புடைய பழைய செய்தி: சர்ச்சை கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: தட்டிக்கேட்டவரை கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது