தூங்கும்போது அண்ணனின் வீட்டிற்கு தீ வைத்த தம்பி கைது
முன்விரோதம் காரணமாக சகோதரர்களுக்குள் இருந்த பிரச்னையில் நள்ளிரவில் வீட்டை கொளுத்திய தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் வசித்து வருபவர் கண்ணபிரான். இவர் நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த போது, 1 மணியளவில் வீட்டில் நாட்டு வெடி பட்டாசுகளை யாரோ வீசியுள்ளனர். இதனால் வீடு தீப்பிடித்துள்ளது. வீட்டினுள் சிக்கி தவித்தவர்கள், புகை மண்டலம் சூழ்ந்ததால் வெளியில் வரமுடியாமல் கூச்சலிட்டனர்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து நான்கு பேரையும் எவ்வித காயமுமின்றி மீட்டனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமாயின. இதுகுறித்து கண்ணபிரான் கொடுத்த புகாரின் பேரில், அவரது தம்பி சம்பத் என்பவரை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தீ வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் வீட்டில் தீ வைத்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சொத்து தொடர்பான பிரச்னை என தெரியவந்துள்ளது.